×

கொடைக்கானலில் நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கொடைக்கானல்: அதிக அளவில் நறுமணப் பொருட்கள் விளையும் கொடைக்கானலில் நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். “எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் பயமின்றி சாப்பிடலாம்” என்பது மிளகின் மருத்துவ மகத்துவத்தை எடுத்துரைக்கும் பழமொழி.

இத்தகைய சிறப்புமிக்க கருமிளகு, பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பெருங்காயம், பூண்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நறுமணப் பொருட்களை கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, நன்னாரி, கீழாநெல்லி, துளசி, நீலக்குறிஞ்சி போன்ற அரிய மூலிகைகளும், மலைநாவல், நாட்டு அத்தி போன்ற இயற்கை வழங்கிய மருத்துவச் செடிகளும் இப்பகுதியில் ஏராளமாக உள்ளன.

எனவே, இப்பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில், தடியன்குடிசையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிலத்தை நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்திற்காக முறையாக மாற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

விவசாயிகள் கூறுகையில், “5,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ ஏலக்காய் ரூ.3,000 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. எனவே, விவசாயிகளின் நலனுக்காக ஸ்பைசஸ் போர்டு இங்கு செயல்படுவது கட்டாயத் தேவையாக உள்ளது.

இதுதொடர்பாக போர்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது ஒரு ஆய்வுக் குழு வந்து பார்வையிட்டுள்ளது. இது நல்ல தொடக்கமாக உள்ளது,” என்றனர்.

ஆராய்ச்சி நிலையம் முழு அளவில் செயல்படத் தொடங்கினால், தரமான நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்வதுடன், புதிய தொழில்நுட்பங்கள், மேம்பட்ட சாகுபடி முறைகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர். வளம் நிறைந்த கொடைக்கானலில் விரைவில் நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.

Tags : Kodaikanal ,
× RELATED சப்தகன்னியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா