பிரதமர், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய கோரி பிரதமர் இல்லம் அருகே காங்கிரஸ் போராட்டம்

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு, மாணவர்கள் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தடியடி ஆகியவற்றுக்காக பிரதமர் மோடி பதவி விலகக்கோரி பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். மேலும் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான பதவி விலகி கோரி கைகளில் விலங்கிட்டு நூதன போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

பிரதமரின் இல்லத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் பேசுகையில் எங்களை அவர்கள் கண்ணியக்குறைவாக நடத்துகிறார்கள். நேற்று மாணவர்கள் தாக்கப்பட்டனர்; இன்று எங்களை போராடவிடாமல் தள்ளுகின்றனர். எங்கள் குறைகளை நாங்கள் வேறு எங்கே சொல்வது? நாடாளுமன்றத்தில்கூட அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை என்று சாடினார்.

காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் ஹுசைன் பேசுகையில், ” நேற்று இங்கு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடித்தல் மற்றும் கண்ணீர்ப்புகை வீச்சு உள்ளிட்ட விவகாரத்தை மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் இன்று எழுப்ப ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் முயன்றனர். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சொல்லப்போனால், எந்தவொரு எதிர்க்கட்சி எம்.பி.யும் பேச அனுமதிக்கப்படவில்லை. பிரதமர் நாடாளுமன்றத்திற்கே வருவதில்லை. எனவே தான், எங்கள் குரல் ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் இல்லம் நோக்கி வந்துள்ளோம் என்றார். காங்கிரஸ் எம்.பி. சுக்பிந்தர் சிங் ரந்தாவாவை போலீஸ் இழுத்து செல்ல முயன்ற போது, நீங்களே பாருங்கள் எம்.பி.க்களுக்கே இந்த நிலை என்றால், மாணவர்களின் நிலை என்ன என்று கற்பனை செய்து பாருங்கள் என்றார்.

 

Related Stories: