மதுரை, ஜூலை 21: மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 30 பவுன் நகைகளை மீட்டனர். மதுரை, கூடல்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கீத் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராஜம்(65). இவரது வீட்டில் கடந்த மாதம் 16ம் தேதி, 22 பவுன் நகைகள், 2 வைரத்தோடு, 2 கிலோ வெள்ளி் பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடுபோனது. இதேபோல், அப்பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளிலும் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே திருப்பாலை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இந்நிலையில், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சுரேஷ் என்ற பட்டறை சுரேஷ் (23), என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
