×

அமைச்சரின் பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ புறக்கணிப்பு; தவெக மாவட்ட செயலாளரின் காரை எம்எல்ஏ ஆதரவாளர்கள் சிறைபிடிப்பு: சாலையில் படுத்து மறியல் போராட்டம்: திண்டுக்கல் மாவட்டத்திலும் கோஷ்டி பூசல்

 

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே அமைச்சரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தவெக எம்எல்ஏ, கட்சி நிர்வாகிகளை புறக்கணித்ததாக கூறி, மாவட்டச் செயலாளரின் காரை சிறைபிடித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

திண்டுக்கல் தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தேவா (எ) வாசுதேவன் தலைமை வகித்தார். விழா குறித்து நிலக்கோட்டை தொகுதி தவெக எம்எல்ஏ அய்யனார் மற்றும் அப்பகுதி ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், இந்த விழாவுக்காக அமைக்கப்பட்ட பேனர்களில் எம்எல்ஏ உள்பட கட்சி நிர்வாகிகளின் படங்கள், பெயர்கள் இல்லை என தெரிகிறது.விழா முடிந்ததும் இதுகுறித்து விளக்கம் கேட்க பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் தேவாவை சந்திக்க சென்றுள்ளனர்.

ஆனால், அவர் காரில் ஏறி, நிர்வாகிகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டச் செயலாளரின் காரை நிலக்கோட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் பள்ளப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மறித்து சிறைபிடித்தனர். மேலும் சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார், இருதரப்பினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தவெக கட்சியில் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் இடையே நடக்கும் கோஷ்டி பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : MLA ,minister ,Thaweka ,Dindigul district ,Nilakottai ,Pallapatti ,general secretary ,
× RELATED சப்தகன்னியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா