தமிழ்நாட்டிற்கான ஜூன், ஜூலை மாத காவிரி நீரை பெற கர்நாடத்திற்கு முதல்வர் அழுத்தம் தர வேண்டும்: எடப்பாடி, நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

 

சென்னை: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாக பெற உறுதியான அழுத்தத்தை முதல்வர் தர வேண்டும் என்று எடப்பாடி, நயினார் நாகேந்திரன் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை தரும்படி கர்நாடக அரசிற்கு அறிவுறுத்திய பிறகும், காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் தண்ணீரை திறக்க உத்தரவிடவில்லை; தமிழக அரசும் தண்ணீரை திறக்கும்படி கேட்கவில்லை; எனவே, தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் உண்மைக்கு மாறாக கூறியிருந்தார்.

தமிழ்நாடு முதல்வர், கர்நாடக அரசுடன் தொடர்பு கொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களாக தமிழகத்திற்குரிய பங்கு நீரை பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள்.

லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களும் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி (நாளை) காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாக பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என பொய்க்கால் குதிரை தவெக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜ தலைவர்):கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தவெக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் தான் ஆட்சியிலிருக்கின்றன. மேலும், தவெக அரசில் காங்கிரஸ் அமைச்சர்களும் இருக்கிறார்கள். ஆகவே, தமிழக முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா முதல்-மந்திரிகளின் ஒத்துழைப்போடு, இந்த அணை பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண வேண்டும்.

முதல்வர் விஜய், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைபோல் இல்லாமல், தமிழக மக்களின் நலனையும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தையும் மனதில் வைத்து தோழமைக்கட்சி தலைவரான ராகுல்காந்தியிடம் பேசி, காவிரி, மேகதாது, முல்லை பெரியாறு அணை பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: