×

வீர ஆஞ்சநேயரும் வீர மகானும்!

பகுதி 1

மத்வ மகான்ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களை மட்டும் இந்த தொகுப்பில் கண்டு வருகிறோம். சில இதழ்களில் இந்த தொகுப்பு வராமல் இருந்திருக்கலாம். காரணம், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை தேடிக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. பல அனுமன் கோயில்களுக்கு தொடர்பு எண்களே கிடையாது. சில அனுமன் கோயில்களுக்கு வாகன வசதிகள் கிடையாது. இதையெல்லாம் மீறி இன்று சுமார் 53 அனுமன்களை நாம் தரிசித்துவிட்டோம் என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயத்தில், காலதாமதத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். கூடியவரை காலதாமதமின்றி இந்தத் தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
கண்ணில் தென்பட்ட மூலபிருந்தாவனம்
விழுப்புரம் அடுத்த வீரசோழபுரத்தில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே நாம் அங்கு செல்ல தயாரானோம். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம் சென்று, அங்கிருந்து வீரசோழபுரம் சென்றடைந்தோம். அதன் பிறகு தென்பெண்ணை ஆறு அருகில் உள்ள “உத்தராதி மடத்தை’’ அடைந்தோம். ஆட்கள் நடமாட்டமின்றி மடமே அமைதியாக காணப்பட்டது. காற்றின் ஓசை மட்டும் காதில் கேட்டது. மடத்தின் நிர்வாகி ஒருவர், நம்மை அழைத்துக் கொண்டு மடத்தை சுற்றிக் காட்டி, மடத்தின் புராதனத்தை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார். அனுமனைக்கண்டு பக்தியில் ஆழ்ந்தோம். இங்கு மொத்தம் ஐந்து அனுமன்களை காணலாம். அனுமனை தரிசித்தவுடன் நேர் எதிரில், ஒரு மூலபிருந்தாவனத்தையும் கண்டோம்.
“சார்.. இது என்ன பிருந்தாவனம்? யாருடையது?’’ என வினவினோம். அவர் சரலமாக பிருந்தாவனத்தை பற்றி நம்மோடு பகீர்ந்துக்கொண்டார்.
நரசிம்மரின் அருளால் நரசிம்மன்
“இந்த மூலபிருந்தாவனத்தில் இருந்து அருள்பவர், மகான்ஸ்ரீ சத்யநாத தீர்த்தர். இவர், மத்வ மடமான உத்தராதி மடத்தின் குருபரம்பரையில் வந்த 19-வது மடாதிபதியாவார். இவரது காலம் 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகும்.ஸ்ரீ சத்யநாத தீர்த்தரும்,ஸ்ரீ வியாசராஜ மடம் வழியில் வந்தஸ்ரீ லட்சுமிநாத தீர்த்தரும் (1642-1660), அவருக்குப் பின் வந்தஸ்ரீ லட்சுமிபதி தீர்த்தரும் (1660-1690) மற்றும்ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் வழியில் வந்தஸ்ரீ யோகீந்திர தீர்த்தரும் (1671-1688) சமகாலத்தவர்கள். மேலும், ஒளரங்கசீப்பின் காலகட்டம் அது! யோகீந்திர தீர்த்தரின் மூலபிருந்தாவனம்,ஸ்ரீ ரங்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையை ஒட்டி அமைந்த கிராமம்தான் “மிராஜ்’’. அக்காலத்தில் மிராஜ், கடும் பின்தங்கிய கிராமமாகும். இங்கு, கிருஷ்ணாச்சார்யா மற்றும் ருக்மிணி என்னும் தம்பதி வாழ்ந்துவந்தார்கள்.
இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அதனால், தங்கள் குலதெய்வமானஸ்ரீ லட்சுமி நரசிம்மரை மனமுருகி வேண்டிக் கொண்டனர். தெய்வீக அருளால் சில மாதங்களிலே கிருஷ்ணாச்சார்யா மற்றும் ருக்மிணி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை, பிறந்தது. அந்த குழந்தைதான், பிற்காலத்தில்ஸ்ரீ சத்யநாத தீர்த்தராக உருவெடுத்தார். லட்சுமி நரசிம்மரின் வரப்பிரசாதமாக குழந்தை பிறந்ததால், அக்குழந்தைக்கு “நரசிம்மன்’’ என்று பெற்றோர்கள் பெயர் சூட்டினார்கள். (இனி சத்யநாத தீர்த்தரை நரசிம்மன் என்னும் பெயரில் காணலாம்)
துறவற வாழ்க்கையில் ஆர்வம்
நரசிம்மனின் தந்தை, வேதம் மற்றும் வேதாந்த சாஸ்திரங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவராக விளங்கினார். அதன் காரணமாக, சிறுவயது முதலே நரசிம்மனும் மத்வ சம்ரதாயத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்டார். தந்தையை போலவே, நரசிம்மரும் வேதாந்தத்தில் சிறந்து விளங்கினார். அதனால், இவருக்கு “ரகுநாதாச்சார்யா’’ என்னும் பெயரும் உருவானது. ஆக, பெற்றோர் இட்ட பெயர் நரசிம்மன். வேதாந்த புலமையை கண்டு ரகுநாதாச்சார்யா என்னும் பெயர் உருவானது. சந்நியாசியான பிறகுஸ்ரீ சத்யநாத தீர்த்தர் என்னும் பெயர் உண்டானது. நரசிம்மரின் உபநயனம் அவரது எட்டாவது வயதில் நடைபெற்றது. பின்பு, உபநயனம் நடைபெற்ற குறுகிய காலத்துலே திருமணமும் நடைபெற்றது. நரசிம்மரின் வேத அறிவு வளரவளர, உலக இன்பங்களின் மீதான பற்று விலக ஆரம்பித்தது. துறவற வாழ்க்கையைத் தழுவும் விருப்பம் மேலோங்கியது.
அதன் பிறகு தனது 21-வது வயதில், மகான்ஸ்ரீ சத்யநிதி தீர்த்தரை அணுகி, மீதமுள்ள தனது வாழ்நாட்களை சந்நியாசம் பெற்று, உன்னதமானஸ்ரீ நாராயணனின் சேவையில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்தார். இருந்தும், உடனடியாக சந்நியாசம் கொடுக்கவில்லை. சில பரிசோதனைகளை நடத்திட எண்ணினார், சத்யநிதி தீர்த்தர். முதலில், நரசிம்மரின் மன உறுதியை சோதிக்க திட்டமிட்டார்.
உபன்யாசம் செய்ய கட்டளை
அதன்படி,ஸ்ரீ சத்யவிரத தீர்த்தரின் (சத்யநிதி தீர்த்தரின் குரு) மூலபிருந்தாவனத்திற்கு முன்பாக, ஓராண்டு இல்லை… ஈராண்டு இல்லை.. சுமார் 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து துவைத வேதாந்தம் குறித்து, உபன்யாசத்தை நிகழ்த்துமாறு நரசிம்மருக்கு உத்ரரவிட்டார், சத்யநிதி தீர்த்தர். சத்யவிரத தீர்த்தரின் மூலபிருந்தாவனம், மீராஜ் பகுதி அருகில் கிருஷ்ணா நதிக்கரை ஒட்டி சாங்லி என்னும் இடத்தில் உள்ளது. அதாவது, நரசிம்மன் பிறந்த ஊரின் அருகில்தான் சத்யவிரத தீர்த்தரின் பிருந்தாவனமும் உள்ளது. அதன் பிறகு, சத்யநிதி தீர்த்தர், தேசசஞ்சாரத்திற்கு சென்றுவிட்டார். சரியாக எட்டு ஆண்டுகள் கழித்து, மீண்டும் சாங்லி பகுதிக்கு வருகிறார். அப்போது, தான் கூறியதுபடி, சத்யவிரத தீர்த்தரின் முன்பாக உபன்யாசத்தை செய்துக்கொண்டிருந்தார், நரசிம்மன்.
இதனைக்கண்ட சத்யநிதி தீர்த்தர், மனம் குளிர்ந்தார். நரசிம்மனின் உண்மையான, தூய்மையான பக்தியைக் கண்ட சத்யநிதி தீர்த்தர், இத்துடன் பரிசோதனை போதும் என்று முடிவு செய்து, சுமார் 1660 – ஆம் ஆண்டில், நரசிம்மனுக்கு சந்நியாசம் அளித்து, அவருக்கு “ஸ்ரீசத்யநாத தீர்த்தர்’’ என்னும் பெயரிட்டார். மேலும், தனது மடமான உத்தராதி மடத்தின் மடாதிபதியாகவும் நியமனம் செய்தார், சத்யநிதி தீர்த்தர். தனது சீடர்களுக்கு பாடம் எடுப்பது, உபன்யாசம் நிகழ்த்துவது, பூஜைகளை மேற்கொள்வது என நாட்கள் முழுவதும் ஓய்வேயில்லாது இருப்பார், சத்யநாத தீர்த்தர். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சில புத்தகத்தையும் எழுதினார்.
நவீன புத்தகம்
மகான்ஸ்ரீ வியாசராஜர் எழுதிய “தாத்பர்ய சந்திரிகா’’ (Taatparya Chandrika), “நியாயம்ரிதா’’ (Nyayamrita), “தர்கா – தாண்டவம்’’ (Tarka – Taandava) ஆகியவைகளுக்கு “வியாச -திரேயா’’ (Vyasa -Traya) என்று பெயர். இந்த நூல்களை வியாசராஜர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியிருந்தார். அதனை “அபிநவ’’ (Abhinava) என்று தலைப்பிட்டு, “அபிநவ சந்திரிகா’’ (Abhinava Chandrika), “அபிநவாம்ருதம்’’ (Abhinavaamruta), “அபிநவ தர்க்க தாண்டவ’’ (Abhinava Tarka Taandava), “அபிநவ கட’’ (Abhinava Gada) என்று எழுதினார், சத்யநாத தீர்த்தர்.
“அபிநவ’’ என்றால் “நவீன’’ அல்லது “புதிய’’ என்று பொருள்படும். இந்த பெயரைத்தான், சத்யநாத தீர்த்தர் தனது சீடருக்கு “ஸ்ரீசத்ய அபிநவ தீர்த்தர்’’ என்று பெயர் சூட்டினார். இவரின் மூலபிருந்தாவனம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோயிலில் உள்ளது.
(அடுத்த இதழில்…)

Tags : Anjaneya ,Mahan ,Madhva Mahan ,Sri Vyasaraja ,Hanuman ,Vyasaraja ,
× RELATED கெட்டவர்களை விட நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையா?