தியாகராஜநகர், ஜூலை 20: நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஜூலை மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பம் பதிவாகி வருகிறது. வழக்கமாக ஜூலை மாதம் தென்மேற்கு பருவக்காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்விப்பது வழக்கம். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ஏப்ரல், மே மாதங்களை நினைவுபடுத்தும் வகையில் வெயில் தாக்கம் ஜூலையில் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர வெயில் தாக்க நாட்களைப்போல் தினமும் 100 டிகிரிக்கு குறையாமல் வெப்பம் பதிவாகி வருகிறது.
நேற்று முன்தினம் 99 டிகிரியாக வெப்பம் சரிந்த நிலையில் நேற்று வெயில் தாக்கம் மீண்டும் அதிகரித்து சுட்டெரித்தது. மாவட்டத்தில் நேற்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 101 டிகிரியாக உயர்ந்தது. இதனால் பகலில் சாலைகளில் சென்றுவர்கள் மிகுந்த அவதிப்பட்டனர். குளிர்பானங்கள் விற்பனை களைகட்டியது.
