கழுகுமலையில் மலை மீதுள்ள தடுப்பு கம்பிகளின் உயரம் அதிகரிக்கப்படுமா?

 

கழுகுமலை, ஜூலை 20: கழுகுமலை மலையின் மீதுள்ள வரலாற்று சின்னங்களை பார்வையிட வருவோரின் பாதுகாப்பு கருதி தடுப்பு கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு விளக்க வழிகாட்டி நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோயிலான இதை முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதே போல் அவர்களது காலத்திலேயே கழுகுமலை மலை மீதுள்ள சமணர் பள்ளி மற்றும் வெட்டுவான் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடினமான பாறையை சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாகச் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் வெட்டுவான் கோயில் என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற கோயில் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மேலும், தமிழகத்தின் எல்லோரா என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்று சின்னங்களாக உள்ள இவற்றை தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். சிறப்பு வாய்ந்த கழுகுமலையை கடந்த 15.7.2014 அன்று சட்டப்பேரவை, 110 விதியின் கீழ் புராதன நகரமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கழுகுமலையில் உள்ள மலை தமிழக அரசின் தொல்லியல்துறை கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்ட மரபு சின்னமாக உள்ளது. இங்கு கடந்த 9.8.2021ல் ரூ.50 லட்சத்தில் வெட்டுவான் கோயில் முதல் உச்சி பிள்ளையார் கோயில் வரை கைப்பிடிகள் மற்றும் படிகள் 3 பெரிய அளவிலான ஒளிரும் பெயர் பலகைகள், 2 சிறிய ஒளிரும் பெயர் பலகைகள், கிரிப்பிரகார மேல ரதவீதியில் பேருந்து நிலையம் அருகே மற்றும் கழுகாசலமூர்த்தி கோயில் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்பை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு வாய்ந்த இந்த மலைப்பகுதிக்கு ஒரு காவலாளி மட்டுமே உள்ளார். ஆனால், இங்குள்ள சமணர் சிற்பங்கள் மற்றும் சமணர் படுக்கை, வெட்டுவான் கோயில் உருவானது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்க வழிகாட்டி நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், மலைக்கு செல்வதற்கான படிகளின் அருகே கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கைப்பிடிகள் உயரம் குறைவாக உள்ளது. இதனால் ஆபத்தை உணராமல் அதனை தாண்டிக் குதித்து சிலர் மலைப்பகுதிக்கு செல்கின்றனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் மலைக்கு சென்ற தம்பதி, குரங்குகளுக்கு பழங்கள் அளித்த போது, குரங்குகள் கூட்டமாக வருவதை பார்த்த பெண், கைப்பிடியை தாண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான காணும் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை மற்றும் விடுமுறை நாட்களில் கழுகுமலையில் உள்ள மலைக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருவது வழக்கம். இதில், மலையில் இருந்த விழுந்து இதுவரை சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, மலைக்கு உள்ள கைப்பிடிகளின் கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் மலைக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். வெட்டுவான் கோயில் மற்றும் அய்யனார் கோயில் வரை குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: