ஸ்ரீவைகுண்டம், ஜூலை 20: இடைத்தேர்தலில் புதிய வரலாறை நாங்கள் உருவாக்குவோம். அதிமுக தொண்டன் எங்களுடன் கை கொடுப்பான். திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஒழிக்க முடியாது என ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். திமுக சார்பில் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வஉசி திடலில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, திமுக வர்த்தக அணி துணைத் தலைவர் கோவிசெழியன் உள்பட பலர் பங்கேற்று பேசினர். அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், திமுகவில் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் இணைந்திருக்கிறார்கள். முதியவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். மீண்டும் திமுக ஆட்சி மலரும். புரிந்தால் புரிந்து கொள்ளட்டும். தெரிந்தால் தெரிந்து கொள்ளட்டும். பழநியில் நாம் பாதுகாத்து வைத்திருந்த கார் பார்க்கிங்கை ரகசியமாக பத்திரம் போட்டுள்ளார்கள்.
ரூ.2 கோடி கொடுத்து பத்திரம் பதிவு செய்தது போல் செய்துள்ளார். இதில் பெரிய மனிதர்கள் தலையீடு இல்லாமல் எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எந்த வகையில் மணல் அள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது?. மின்துறை அமைச்சர் தனது மனைவியை எப்படி திருவல்லிக்கேணிக்கு பணியிட மாற்றம் செய்து கொண்டு வந்தார். அமைச்சர் என்ற போர்வையில் தானே? அது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? இடைத்தேர்தலில் புதிய வரலாறை நாங்கள் உருவாக்குவோம். அதிமுகவை அழித்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. ஏன் என்று சொன்னால் அது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்ட இயக்கம். தொண்டன் பார்த்துக் கொண்டே இருப்பான். அதிமுக தொண்டன் எங்களுடன் கை கொடுப்பான். அதிமுகவை ஒழிக்க பார்க்கிறீர்களா? திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஒழிக்க முடியாது என பேசினார்.
விழாவிற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் சரத் பாலா, மகளிர் அணி பிரசாரக் குழு செயலாளர் பொன்ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்ம சக்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுக பாண்டி, வழக்கறிஞர் இன்பராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெப தங்கம், பிரேமா, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுக பெருமாள், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் கொம்பையா, இசக்கி பாண்டியன், ரவி, கோட்டாளம், நவீன் குமார், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, பொறியாளர் அணி ஆனந்த், நகரச் செயலாளர் கோபிநாத், இளைஞர் அணி காசி சண்முகம், மாணவரணி பொறியாளர்கள் பொன் இசக்கி, இசக்கி பாண்டி, செந்தில், முருகன், செல்வராஜ், கந்தன், செல்வ இசக்கி, மாரிமுத்து, சங்கரன், இசக்கி ராஜா, துக்கமுத்து, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தந்த சிவசுப்பு, தாமஸ், ஏசையா, சங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகுண்டம் நகர செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.
