×

தரமற்ற எண்ணெய், பிளாஸ்டிக் பறிமுதல்

 

போடி, ஜூலை 20: போடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள், போலியான மற்றும் இரண்டாம் தரமான சமையல் எண்ணெய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அதிகளவில் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து புகார்கள் சென்றன. அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா தலைமையிலான , போடி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று போடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். போடி காமராஜர் சாலை, பெரியாண்டவர் ஹைரோடு, பொன்னம்பலம் தெரு, வள்ளுவர் சிலை மார்க்கெட் தெரு, பரமசிவன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் எண்ணெய் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லேபிள் (முகவரிச் சீட்டு) இல்லாத சமையல் எண்ணெய் டின்கள் விற்கப்பட்டது கண்டறியப்பட்டன. சில கடைகளில் செக்கு எண்ணெய் என்ற பெயர்பலகை வைத்துக்கொண்டு, உள்ளே தரம் குறைந்த இரண்டாம் தர எண்ணெய்களை லேபிள் இல்லாமல் மொத்தமாகவும், சில்லறையாகவும் பொதுமக்களுக்குக் கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாதிரிகளை பகுப்பாய்விற்காக உணவுப் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்ப வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடைகள், பேக்கரிகள் மற்றும் இனிப்பகங்களில் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 200 கிலோவிற்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags : Bodi ,
× RELATED தொழிலாளி தவறி விழுந்து சாவு