புழல்: சோழவரம் அருகே ஒரக்காடு-அருமந்தை இடையிலான மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள ரட்சத பள்ளங்களால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சோழவரம் அடுத்த ஒரக்காடு – அருமந்தை மாநில நெடுஞ்சாலை வழியாக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் சென்று வருகின்றன. அருமந்தை, ஞாயிறு, பூதூர், ஒரக்காடு பகுதிகளை சேர்ந்தவர்கள் செங்குன்றம், சோழவரம் செல்ல இந்த மாநில நெடுஞ்சாலையை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர் போக்குவரத்து காரணமாக இச்சாலை பல்வேறு இடங்களிலும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு, சேதமான சாலையில் செல்பவர்களும், குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். இப்பள்ளங்களை தவிர்க்க வலது, இடது என மாறி மாறி பயணிக்கும் நிலையில், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால் விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பொன்னேரி நெடுஞ்சாலைத் துறையினர், ஒரக்காடு – அருமந்தை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
