ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்றில் உள்நாட்டிலேயே தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, விண்வெளி சுற்றுப்பாதை திறன்கொண்ட முதலாவது தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 (Vikram-1), சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும்.
விக்ரம் 1 ராக்கெட்டை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. Skyroot Aerospace நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய இந்த ராக்கெட், சுமார் 350 கிலோ எடையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக இதற்கு ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் மூலம் கிரஹா ஸ்பேஸ், காஸ்மோ சர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்-ன் SCOPEஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. செயற்கைகோள்கள் திட்டமிட்ட புவிவட்ட பாதையில் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை 11.30 மணிக்கு சரியாக விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் சிறியதொரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராக்கெட் ஏவும் பணி சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது, இதனால் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கவுன்டவுன் துவக்கப்பட்டு 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்சனை?
நோட்டிஃபிகேஷன் சென்சர்களில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், சில நிமிடங்களில் இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
