×

டெல்லியில் 21ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றம்

புதுடெல்லி: ஒன்றிய கல்வி துறை அமைச்சர் பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டதில் இணைத்து உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில் அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 20ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக 21 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலையும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு போலீசார் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நீண்ட கால உண்ணாவிரதத்தால் அவரது உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்த நிலையில், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக காவல்துறையினர் அவரைப் வலுக்கட்டாயமாக போராட்டக் களத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இன்று அதிகாலையில் ஜந்தர் மந்தருக்கு வந்த காவல்துறையினர் சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு மாற்றினர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி (Cockroach Janata Party) தொண்டர்கள், இச்செயலைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனை தொடர்ந்து, டெல்லி ஜந்தர்மந்தரில் போராடிவந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை போலீசார் வெளியேற்றினர். வாங்சுக்குடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், ஆதரவாளர்களும் குண்டுகட்டாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Sonam Wangchuk ,Delhi ,NEW DELHI ,Janata Party ,Union ,Education Minister ,Pradhan ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்!