திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 18: திருக்காட்டுப்பள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட கிராமங்களில் தொலைந்துபோன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து தொலைந்து போன செல்போன்களை காவல் நிலையத்தில் செல்போன் உரிமையாளர்கள் புகார் கொடுத்ததின் அடிப்படையில் சி.ஈ.ஐ.ஆர். பதியப்பட்டு அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து தொலைந்து போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் செல்போன்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து செல்போன் தொலைத்தவர்களை நேற்று திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். காவல் நிலையம் வந்தவர்களுக்கு, அறிவுரை வழங்கிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மீட்கப்பட்ட 23 செல்போன்களை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் சூர்யா, கணினி பதிவாளர் விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
