திருவையாறு, ஜூலை 18: திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளிலிருந்து கிராம சுகாதார உறுப்பினர் குழுவை சேர்ந்த 200 பெண்களுக்கு குடிநீர் தர பரிசோதனை தொகுப்பாய்வு செய்தல், குடிநீர் திட்டங்களை திட்டமிடல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயந்தி, தனலட்சுமி, திலகவதி, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், உதவியாளர் சுப்பு சுரேஷ் மற்றும் கிராம சுகாதாரக் குழுவினர் கலந்து கொண்டனர். கிராம சுகாதார குழுவினருக்கு குடிநீர் வடிகால் வாரிய துறை அலுவலர் காவியா பயிற்சி அளித்தார். அருணா டிரஸ்ட் நிர்வாகி பிரியா வரவேற்றார். வில்சன் நன்றி கூறினார்.
