ஐகோர்ட் கிளை விசாரணையில் திருப்பம்; இரு சார்பதிவாளர்களும் இணைந்தே ரூ.100 கோடி நிலம் பத்திரப்பதிவு: மற்றொரு சார்பதிவாளரை வழக்கில் சேர்க்காதது ஏன்? – நீதிபதி கிடுக்கிப்பிடி

 

* குற்றவாளியை தப்ப வைக்க முயற்சிப்பதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டு

மதுரை: பழநி பத்திரப்பதிவு விவகாரத்தில் 2 சார்பதிவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பது ஐகோர்ட் கிளை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ஒருவரை குற்றவாளியாக்கி, மற்றொருவரை தப்ப வைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக மனுதாரர் வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவரை ஏன் வழக்கில் சேர்க்கவில்லையென ஐகோர்ட் கிளையும் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம், ஜூலை 6ம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இவர் தனக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, சார்பதிவாளரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. கோயில் தரப்பில், ‘‘கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக சார்பதிவாளர் பதிவு செய்து கொடுத்துள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுவையும் ஒன்றாக சேர்த்து நீதிபதி ராஜசேகர் விசாரித்தார். விசாரணையின்போது சார்பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கு விசித்திரமானது. இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு எந்த தொடர்பும் இல்லை.

இந்த இடத்தில் பணியில் இருந்த பாலச்சந்தர் என்ற சார்பதிவாளர் விடுப்பில் சென்றதால், அந்தப் பணியை ஜஸ்டின் மணிகண்டன் சேர்த்து பார்த்துள்ளார். அதே நேரம் பாலச்சந்தர் பணியில் இருந்தபோதே, கடந்த ஜூலை 3ம் தேதியே சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவை மேற்கொண்டுள்ளார். இதன்பிறகு பணியை கவனித்த ஜஸ்டின் மணிகண்டன், எஞ்சிய பணிகளை மட்டுமே முடித்து பதிவு ஆவணத்திற்கு உரிய எண் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றிடும் வகையில் தான் பணியை ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்டார். இல்லாவிட்டால் இவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து பதிவிற்கான எண் வழங்கியுள்ளார்.

இந்த பதிவு நடைமுறையிலும் அவருக்கு சந்தேகம் வந்ததால், அதை மாவட்ட கலெக்டரின் தனிப்பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் மனுதாரரின் பங்கு எதுவும் இல்லை. ஆனால், தற்போதைய தமிழக அரசு திட்டமிட்டு மனுதாரரை குற்றவாளியாக்கி, பாலச்சந்தரை காப்பாற்றும் வகையில் அவரை தப்பிக்க வைத்துள்ளது. இதன் மூலம் வழக்கை நீர்த்து போக செய்யும் வகையில் உண்மையான குற்றவாளியை தப்பிக்க விடும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது’’ என்றார்.
கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மனுதாரர் திட்டமிட்டு சட்ட விதிகளை பின்பற்றாமல் பத்திரப்பதிவு செய்துள்ளதற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளது. 2ம் தேதி பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என கோயில் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தை 3ம் தேதி சார்பதிவாளர் கையெழுத்திட்டு பெற்றுள்ளார். அதற்கான ஆவணம் உள்ளது. மேலும் இவர் மீது ஏற்கனவே அரசு சொத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்குகள் உள்ளது. எனவே இவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘இந்த விவாகரத்தில் ஏற்கனவே பத்திரப்பதிவு மேற்கொண்ட சார்பதிவாளர் பாலசந்தர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளாரா? அவரை சேர்க்காதது ஏன்’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், ‘‘3ம் தேதி பத்திர பதிவுக்கான வேலைகள் மட்டுமே செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுதாரர் தான் பதிவுகளை முறைப்படி முடித்து ஆவண எண் வழங்கியுள்ளார். எனவே, அவரை வழக்கில் சேர்க்கவில்லை. தேவைப்படும்பட்சத்தில் விசாரணை செய்து யாராக இருந்தாலும் வழக்கில் சேர்க்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் மனுதாரர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர் பத்திரப்பதிவில் இறுதிக்கட்டப் பணிகளை மட்டும் தான் முடித்துள்ளார். பின்னர் பத்திரப்பதிவு விசாரணைக்காக கலெக்டரிடம் பத்திரங்களை அனுப்பி உள்ளார். எனவே, இந்த வழக்கில் மனுதாரருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் மறு உத்தரவு வரும் வரை தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

சார்பதிவாளருக்கு முன்ஜாமீன்
ரூ.100 கோடி நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அன்று பணியில் இருந்த பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவில் இறுதிக்கட்டப் பணிகளை மட்டும் தான் முடித்துள்ளார். பின்னர் பத்திரப்பதிவு விசாரணைக்காக கலெக்டரிடம் பத்திரங்களை அனுப்பி உள்ளார். எனவே, இந்த வழக்கில் மனுதாரருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

* இந்த இடத்தில் பணியில் இருந்த பாலச்சந்தர் என்ற சார்பதிவாளர் விடுப்பில் சென்றதால், அந்தப் பணியை ஜஸ்டின் மணிகண்டன் சேர்த்து பார்த்துள்ளார். அதே நேரம் பாலச்சந்தர் பணியில் இருந்தபோதே, கடந்த ஜூலை 3ம் தேதியே சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
* தற்போதைய தமிழக அரசு திட்டமிட்டு மனுதாரரை குற்றவாளியாக்கி, பாலச்சந்தரை காப்பாற்றும் வகையில் அவரை தப்பிக்க வைத்துள்ளது. இதன் மூலம் வழக்கை நீர்த்து போக செய்யும் வகையில் உண்மையான குற்றவாளியை தப்பிக்க விடும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

Related Stories: