×

விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர் விஜயன் அலைக்கழிப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

 

சென்னை: விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர் விஜயன் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகச் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் திருவல்லிக்கேணி காவல் துறையினர், புதிய தலைமுறை தொலைகாட்சியின் முதுநிலை ஆசிரியர் விஜயனை விசாரணை என அழைத்து அவரை அலைக்கழித்து வருகின்றனர். மேலும், அவரின் தொலைபேசியை பறிமுதல் செய்வது போன்ற செயல்களிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி: பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு. உடனடியாக பத்திரிகையாளர் விஜயனை விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்: முதுநிலை செய்தி ஆசிரியர் விஜயன் நெறிப்படுத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வோர் அனைவரும் அவரோடு தொடர்பில் இருப்பதும், இவரும் அவர்களைத் தொடர்பு கொள்ளுவதும் தொழில் சார்ந்த பணி என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு விஜயன் மீது குற்றம் சுமத்த முயல்வது அதிகார அத்துமீறலாகும். ஊடகவியலாளர் விஜயனை அலைக்கழிப்பதை கைவிட்டு, அவர் சுதந்திரமாகப் பணியாற்றும் சூழலை உறுதிப்படுத்திட வேண்டும்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: விஜயனிடம் விசாரணை எனும் பெயரில் காவலில் வைத்து அலைக்கழித்ததோடு, அவரின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்திருக்கும் காவல்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தவெக சட்டமன்ற உறுப்பினர் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காவல்துறை, கடந்த மே மாதம் இரவு 8ம் தேதி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட போலிக் கடித விவகாரத்தில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன்?. இது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஊடகவியலாளர் விஜயனை விசாரணை எனும் பெயரில் தவெக அரசின் காவல்துறை அலைக்கழிப்பு செய்வதும், அச்சுறுத்துவதுமான போக்கு அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத்தாக்குதலாகும். தவெக அரசின் இந்தக் கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளாவிடில், ஜனநாயக ஆற்றல்கள் மூலம் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான விஜயனைப் பல மணி நேரம் கேள்வி கேட்டதோடு நிற்காமல், நள்ளிரவில் மீண்டும் வருமாறு அழைத்து, உரிய நடைமுறைகள் குறித்த வெளிப்படையான விளக்கமின்றி அவரது கைப்பேசியைக் கைப்பற்றியிருப்பதாக வெளியாகியுள்ளத் தகவல்கள் மிகுந்த கவலைக்குரியவை. பத்திரிகைச் சுதந்திர உரிமையைப் பாதிக்கும் எந்தச் செயலையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்றுக்கொள்ளாது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: ஊடகவியலாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டதோடு, அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. இது ஜனநாயக ஆட்சிக்கு ஏற்ற செயல்கள் அல்ல. இது காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகமாகவும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சியாகவும் விளங்குகின்றது.

Tags : Vijayan ,Chennai ,Thaweka ,Thiruvallikeni ,
× RELATED பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் (Public...