சென்னை: சென்னை-பெங்களுரு புல்லட் ரயில் திட்டத்திற்கு ரூ.18000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான இந்தியாவின் மூன்றாவது அதிவேக புல்லட் ரயில் திட்டப்பணிகள், பூர்வாங்க கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. தேசிய அதிவேக ரயில் கழகம் வெளியிட்டுள்ள புதிய டெண்டரின்படி, ஒப்பந்ததாரர் இத்திட்டத்தின் திருத்தப்பட்ட புதிய வழித்தட வரைபடத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்தம் 306.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், கோலார், கொடிஹள்ளி, ஒயிட்ஃபீல்டு மற்றும் பெங்களூரு பையப்பனஹள்ளி ஆகிய எட்டு முக்கிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலைய இணைப்புக்காக, பரந்தூர் தற்போதைக்கு ‘எதிர்கால நிலையமாக’ குறிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய இந்த புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் தற்போதைய 7 மணி நேரத்திலிருந்து வெறும் 1 மணி நேரத்திற்கும் குறைவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக இத்திட்ட வழித்தடத்தில் அமையவுள்ள 41 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 18,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையின் முதல் புல்லட் ரயில் நிலையம் சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு, அது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் முறையே 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள இணைப்புகள் மூலம் இணைக்கப்பட உள்ளது. இங்கிருந்து புறப்படும் ரயில் பெரம்பூர், கொளத்தூர், ஐ.சி.எஃப், மாதவரம், பாடி மேம்பாலம், சென்னை பைபாஸ், சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை, அண்ணனூர், பூந்தமல்லி வழியாக அரக்கோணம் சென்றடையும். அங்கிருந்து சென்னை – பெங்களூரு விரைவுச்சாலையை (NE-7) ஒட்டி இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லி ரயில் நிலையம் வெளிவட்டச் சாலை மற்றும் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 306.2 கிலோமீட்டர் வழித்தடத்தில் சுமார் 28 கிலோமீட்டர் தூரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. மீதமுள்ள பாதைகள் அனைத்தும் தூண்களின் மீது அமைக்கப்பட்ட மேம்பாலப் பாதையாக இருக்கும். இத்திட்டத்தில் மூன்று பிரம்மாண்ட சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. அதில் சென்னை சென்ட்ரல் பகுதியில் 1.7 கிலோமீட்டர் சுரங்கப்பாதையும், ஆந்திராவின் கவுண்டின்யா வனவிலங்கு சரணாலய மலைப்பகுதியில் 11.8 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதையும், பெங்களூரு நகர்ப்புறப் பகுதியில் 14.7 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதையும் அமையவுள்ளன. இந்த அதிவேக ரயில் திட்டத்திற்காக இந்திய ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து செயல்பட உள்ளன.
