×

வாலிபர் கொலை வழக்கில் திருப்பம் கணவனை கொன்றுவிட்டு குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

 

திருமலை: கோயிலுக்கு சென்ற தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியே தனது கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது மனைவி ஹாசினி (30). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனபள்ளியை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ளார்.

ரமேஷ் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கடந்த 13ம்தேதி ஹாசினி தனது கணவர் ரமேஷ், குழந்தை மவுனிகாவுடன் தாய் வீட்டுக்கு வந்தார். 14ம்தேதி மதியம், மல்லப்பா மலையில் உள்ள கோயிலுக்கு ரமேஷ் உள்பட 3 பேரும் பைக்கில் சென்றனர். ஆனால் அன்று நீண்ட நேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா நேற்று முன்தினம் ரல்லபுதுகுரு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ் மலைகோயில் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஹாசினியும் போயனபள்ளியை சேர்ந்த யுகேந்தரும் சிறுவயது முதலே பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. ரமேசுடன் திருமணம் ஆனாலும் ஹாசினி கள்ளத்தனமாக யுகேந்தருடன் பழகி வந்துள்ளார். இதையறிந்த ரமேஷ், அடிக்கடி தகராறு செய்துள்ளார். எனவே அவரை தீர்த்துக்கட்ட ஹாசினி திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று கணவரிடம் மலைக்கோயிலுக்கு போகலாம் எனக்கூறி குழந்தையுடன் சென்றுள்ளார். இத்தகவலை முன்கூட்டியே தனது காதலன் யுகேந்தருக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர், மல்லப்பா மலையில் ஏறும்போது ​​ஹாசினி திட்டமிட்டபடி மூன்றாவது வளைவில் தனது கைப்பையை கீழே தவறவிட்டது போல் நடித்தார். இதையறியாத ரமேஷ், பைக்கை நிறுத்திவிட்டு கைப்பையை எடுக்க சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் 3 பேர் ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசியுள்ளனர். பின்னர், ரமேஷின் பைக்கில் யுகேந்தர், தனது காதலி ஹாசினி, மவுனிகாவை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு, யுகேந்தர் உள்பட 3 பேர் ரயிலில் சென்றுவிட்டனர் என தெரிய வந்தது.இதையடுத்து யுகேந்தர், ஹாசினி, மவுனிகா மற்றும் கொலைக்கு உதவிய 2 பேர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Tirumala ,Tamil Nadu ,Ramesh ,Devadasanapalli, ,Soolagiri taluka, Krishnagiri district, Tamil Nadu ,Hasini ,
× RELATED இளம் ஜோடிகள் லீலையை ஒளிந்து பார்த்த வாலிபர் கைது