நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: லாத்தூர் ஆசிரியரின் மொபைலில் இருந்த 136 கேள்விகளில் 111 வினாத்தாளில் வந்தது; சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

மும்பை: மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு கடந்த மாதம் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. நீட் வினாத்தாள் கசிந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் முக்கிய குற்றவாளிகளான பேராசிரியர்கள், மருத்துவர்கள் உட்பட 13 பேரை சிபிஐ கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகிறது.

மகாராஷ்டிராவின் லாத்தூரை சேர்ந்த பயிற்சி மைய உரிமையாளரின் மொபைல் போனில் இருந்த 136 வேதியியல் கேள்விகளில் 111 கேள்விகள், தேசிய தேர்வு முகமையின் முதன்மை வினாத்தாளுடன் பொருந்தியுள்ளதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளனர். மேலும், பயிற்சி மையத்தின் உரிமையாளரான சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்கர் என்பவரின் மொபைல் போனில் இருந்து 36 புகைப்படங்கள் மீட்கப்பட்டன. அதில் அவரது கையெழுத்தில் எழுதப்பட்ட 132 தனித்துவமான கேள்விகள் (மொத்தம் 136 கேள்விகள், 5 நகல் படங்கள்) இருந்தன.

இந்த 132 கேள்விகளில் 111 வேதியியல் கேள்விகள் நீட் முதன்மை வினாத்தாள் தொகுப்போடு அச்சுப்பிசகாமல் ஒத்துப்போவது தடயவியல் ஆய்வில் உறுதியாகியுள்ளது. மோடேகாவ்கரின் செல்போனில் இருந்த அந்த புகைப்படங்களின் மெட்டாடேட்டாவை ஆய்வு செய்தபோது, அவை மே 3 அன்று நடந்த நீட் தேர்வுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 23 அன்று) எடுக்கப்பட்டவை என்பது அம்பலமாகியுள்ளது.

நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய பி.வி. குல்கர்னி என்பவர் மூலமாகவே இந்த வினாத்தாள் கசிந்துள்ளது. இந்த வினாத்தாளை பெறுவதற்காக சிவராஜ் மோடேகாவ்கர், லாத்தூரை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் மனோஜ் ஷிரூரே என்பவர் மூலமாக குல்கர்னிக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இந்த லஞ்ச பணத்தை சிபிஐ தற்போது பறிமுதல் செய்துள்ளது. கசிந்த வினாத்தாள்களை கொண்டு மோடேகாவ்கரின் மகன் மற்றும் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு குல்கர்னியின் சிறப்பு வகுப்புகளில் முன்கூட்டியே பயிற்சிகள் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Related Stories: