‘காவல் மரணம் அரசின் தோல்வி’ சமூக வலைதளங்களில் வைரலாகும் தவெக தேர்தல் அறிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக இருந்த வியாபாரி ஒருவர், சிறைக் காவலர்கள் மற்றும் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில் ‘காவல் மரணங்கள்’ குறித்து அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட ‘வெற்றித் தமிழ்நாடு’ (இன்பம்-10) என்ற தேர்தல் அறிக்கையின் 89-வது பக்கத்தில் உள்ள ‘காவல் படுகொலை’ குறித்த கருத்துகள்.

‘ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. நமது த.வெ.க. ஆட்சியில் – திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத் தர – சுதந்திர விசாரணை மேற்கொள்ளப்படும். இத்தகைய கொடும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாகர்கோவிலில் நடந்துள்ள சிறை மரணத்தைச் சுட்டிக்காட்டி, ‘காவல் மரணம் அரசின் தோல்வி’ என தவெக கூறியுள்ள கருத்தை இணையவாசிகள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். குறிப்பாக, கைதியின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு, தவெக-வின் இந்தத் தேர்தல் வாக்குறுதியை ஒப்பிட்டுப் பலரும் விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையும், சிறைத் துறையும் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்தின் தோல்வி என தவெக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. நாகர்கோவில் சம்பவத்தில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்தினர் நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், தவெக-வின் ‘சுதந்திர விசாரணை மற்றும் கடும் நடவடிக்கை’ என்ற வாக்குறுதி பொதுமக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: