- Matur
- மணாலி
- மனாலி மாத்தூர்
- மாதவரம்
- கோசுப்பூர்
- சேனரம்பக்கம்
- நிர்ணயிக்கப்பட்டது
- வலங்கடுகம்
- வெர்னகுத்ரம்
- பால்பனாய்
- எம். எம். டி. ஆஹ்
மணலி: மணலி மாத்தூர் பகுதியில் நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டதால் கோபம் அடைந்த மக்கள், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். வடசென்னைக்கு உட்பட்ட மாதவரம், கொசுப்பூர், சென்றம்பாக்கம், செட்டிமேடு, விளாங்காடுபக்கம் மற்றும் செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலி, பால்பண்ணை, எம்.எம்.டி.ஏ மற்றும் வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி இரவு நேரங்களில் மின்சாரம் தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் மாணவ, மாணவிகள், நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு மாத்தூர் ஆம்ஸ்ட்ராங் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கடும் புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தவித்துள்ளனர். இதுகுறித்து மாத்தூர் எம்எம்டிஏ மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என என்று தெரிகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த மக்கள், கொசப்பூர் – மாத்தூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதன்பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், “மின்சாரம் சும்மாவா தருகிறீர்கள்? மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கிறீர்கள்… ஆனால் அடிப்படை தேவையே சீராக வழங்க முடியவில்லையா’’ என்று கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் மின்வாரிய அதிகாரிகளும் வந்து மறியல் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ‘’உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
