ஈரோடு – சாலைபுதூர்
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தாள் துர்க்காதேவி. அதனால் துர்க்கைக்கு தோஷம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க தேவி நீராடிய தீர்த்தமே நொய்யல் நதியாகும். அதன்பின் துர்க்கை அந்த ஊரிலேயே தங்கி தனது ஆட்சியை மேற்கொண்டாள். பராசக்தியானவள் ‘செல்லாண்டி அம்மன்’ என்ற திருநாமத்துடன் நொய்யல் ஆற்றங் கரையின் மேல் திருக்கோயில் கொண்டு விளங்கி வருகிறாள். அன்னை துர்க்கையாக அவதாரம் கொண்டதால், ‘துர்க்காச்சி’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
துர்க்காச்சியில் உள்ள கோயிலில் செல்லாண்டி அம்மன் இரண்டு இடங்களில் கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள். ஒன்று நொய்யல் நதிக்கரையில் கிழக்குப் பகுதியில் சிவசக்தி வடிவில், ‘நெருஞ்சி முள் செல்லாண்டி அம்மன் சின்னம்மன்’ என்ற பெயருடன் காட்டில் கோயில் கொண்டிருக்கிறாள். நொய்யல் நதிக்கரையின் மேற்குப் பகுதியில், செல்லாண்டி அம்மன் வடக்கு நோக்கியபடி எட்டுக் கரங்கள் கொண்ட ‘துர்க்காச்சி காட்டம்பட்டி செல்லாண்டியம்மன்’ என்ற பெயரில் விளங்குகிறாள். துஷ்டர்களை அழித்து நல்லவர்களை வாழ வைக்கும் சிவதுர்க்கையின் அம்சமாக விளங்குகிறாள். துர்க்காச்சி செல்லாண்டி அம்மன் கோயிலின் ஒரு தனிச் சிறப்பு, இங்கே முற்றிலும் சைவபூஜை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.
அன்னை சிவ துர்க்கையாக விளங்குவதே காரணம். துர்க்கா தேவியாக விளங்கும் துர்க்காச்சி செல்லாண்டியம்மன் ஆலயத்தில் கன்னிப் பெண்கள் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொண்டால், திருமணத் தடைகள் நீங்கி, திருமண வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவுடன் மணமக்கள் ஜோடியாக வந்து செல்லாண்டி அம்மனை மனங்குளிர வழிபட்டு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
பலநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த செல்லாண்டியம்மனை அந்நாட்களில் வெளியூர் பக்தர்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து வழிபட்டுச் சென்றிருக்கிறார்கள். கோயில் வளாகத்திலேயே 10 நாட்கள்வரை தங்கியும் வழிபட்டிருக் கிறார்கள். வடக்கு பகுதியில் அரசமர விநாயகர், செல்லாண்டி அம்மன், பேச்சி சடைச்சி, கன்னிமார் பரிவார சக்திகள் தனியாக கொலுவிருக்கிறார்கள். கிழக்குப் பகுதியில் சடைச்சி பேச்சியம்மன், மதுரை வீராச்சாமி மற்றும் பரிவாரங்களுடன் செல்லாண்டி அம்மன் (சின்னம்மன்) கோயில் கொண்டிருக்கிறாள்.
துர்க்காச்சி செல்லாண்டியம்மன், எட்டுக் கரங்களிலும் உடுக்கை, சூலம், கம்பு, கத்தி, கேடயம், மணி, குங்குமம், நாகமணி ஆகியவற்றை ஏந்தி அருட்காட்சி அளிக்கிறாள். இத்திருக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா கொண்டாடப் படுகிறது. முதல் புதன்கிழமை திருவிழாவிற்கு காப்புகட்டி கட்டளைதாரர்களின் அபிஷேகம் ஒரு வாரம் நடைபெறும்.
அடுத்த புதன்கிழமை பொங்கல் விழா, அம்மன் திருத்தேர் ஊர்வலம், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகின்றன. தொடர்ந்து ஆடிமாதம் குலபக்தர்களின் பால்குடம் அபிஷேகம், மாவிளக்கு பூஜை, காவல்தெய்வமான ஊஞ்சமர கருப்பண்ணசாமிக்கு வழக்கமான நள்ளிரவு பூஜை ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி பூஜை நடைபெறுகிறது.
சக்தி தெய்வமாக விளங்கும் துர்க்காச்சி செல்லாண்டியம்மனை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கும்; எதிரிகள் அழிவர்; பாவங்கள் விலகும்; துயரங்கள் தொடராது; திருமண வரம், குழந்தைபாக்கியம் கிட்டும்; உடல்நலம் பெறும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் நம்பிக்கை. கரூர் – ஈரோடு சாலையில் கொடுமுடி ரயில் சந்திப்பு நிலையத்திலிருந்து சாலைபுதூர் வழியாகச் சென்றால் மூன்றாவது கிலோ மீட்டரில் துர்க்காச்சி கிராமத்தை அடையலாம்.
– உன்னியூர் கே.செல்வம்.
