×

மூன்றாவது மொழியை 6-ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துங்கள், 9-ல் வேண்டாமே – உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுரை

டெல்லி: சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை தெரிவித்து உள்ளார். 9-ஆம் வகுப்பில் மும்மொழியை அறிமுகப்டுத்துவது என்பது பொது தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி நாகரத்னா மேற்கண்ட கருத்தை குறிப்பிட்டு, 9-ஆம் வகுப்பில் மும்மொழியை அமல்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசை அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை (JNVs) அமைப்பதற்கு வழிவகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது நீதிபதி இந்தக் கருத்துகளை தெரிவித்து உள்ளார். நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழித் கொள்கை குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி, அப்பள்ளிகளை அதிக அளவில் அமைப்பதை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

வழக்கு விசாரணையின் போது மூன்றாவது மொழி என்பது 9-ஆம் வகுப்பிலிருந்து மட்டுமே கட்டாயமாக்கப்படுகிறது என்று தமிழக தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி நாகரத்னா, “இல்லை, அது மிகவும் தவறான அணுகுமுறை. ஒன்பதாம் வகுப்பு என்பது மன அழுத்தத்தை அளிக்கக்கூடிய ஒரு காலகட்டம். ஏன் ஒன்பதாம் வகுப்பில் ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்த வேண்டும். எவ்வளவு சீக்கிரம் ஒரு மொழியைக் கற்கத் தொடங்குகிறோமோ, அவ்வளவு நல்லது என்றார்.

தனது சொந்தப் பள்ளி அனுபவத்தை நினைவு கூர்ந்த நீதிபதி, தங்கள் பள்ளியில் மாணவர்கள் பலவிதமான பாடத்திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நடுநிலைப் பள்ளிக் கல்வியின்போதே மூன்றாவது மொழியைக் கற்கத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார். “எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வுக்குத் தேவைப்பட்டதால், நடுநிலைப் பள்ளியிலேயே மூன்றாவது மொழி கற்பிக்கப்படத் தொடங்கியது. இந்தி மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்டவர்களுக்குக் கன்னடமும், கன்னடத்தை இரண்டாம் மொழியாகக் கொண்டவர்களுக்கு இந்தியும் கற்பிக்கப்பட்டன. சமஸ்கிருதமும் இருந்ததால், மூன்றாவது மொழியாக அதையும் தேர்ந்தெடுக்க முடிந்தது என்றார். எனவே மும்மொழி என்பதை ஆறாம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்தி 8-ஆம் வகுப்புடன் முடித்து விடுவது மாணவர்களுக்கு நல்லது என்று அறிவுறுத்தினார்.

Tags : Supreme Court ,Delhi ,Justice ,P. V. Nagaratna ,
× RELATED ஈரானின் சிறுவர் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கத் தாக்குதல்