ஆவடி, ஜூலை 16: பட்டாபிராம் கக்கன்ஜி நகரில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் சத்திரம் பள்ளியில் சமத்துவ நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான இரண்டு நாள் குத்துச்சண்டை போட்டி நடந்தது. ஆவடி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், தர்மபுரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, ஓசூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் என பல்வேறு குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு தனியார் கிளப், சப் ஜூனியர், ஜூனியர், யூத், சீனியர் (ஆண்கள், பெண்கள்) என நக்கவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு நாள் நடைபெற்ற போட்டியில் ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்களை பெற்று பயிற்சியாளர் செந்தில்நாதன் தலைமையிலான சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி முதல் இடத்தை பிடித்து கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு வென்றது. தொடர்ந்து ஐபிசி திருநின்றவூர் அணி இரண்டாம் இடத்தையும், சென்னை ஜிஎஸ்பிசி அணி மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை பூந்தமல்லி பாக்சிங் அணி வென்றது.
