லஞ்சம் கேட்டால் 9498180936 வாட்ஸ்ஆப் நம்பரில் புகார் கொடுங்க.. 18 ஆயிரம் புகார்கள் கிடப்பில் கிடக்கும் நிலையில் அறிவிப்பு: கண்துடைப்பு அறிவிப்பு என குற்றச்சாட்டு

 

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால், அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண்ணை, தமிழக அரசு அறிமுகம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு 18 ஆயிரம் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வருகின்றன. அதில் நூற்றுக்கணக்கான புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் நேற்று அனைத்து அரசு துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் லஞ்சம் வாங்கப்பட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 9498180936 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அரசு துறைகளின் இணையதளத்திலும் இந்த வாட்ஸ்அப் எண் இடம்பெற வேண்டும். அதனுடன் லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தின் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும், அதில் ‘லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும்’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று அரசாணைகளும், கடிதங்களும் அனுப்பப்பட்ட போதிலும், பல அலுவலகங்கள் அதை கடைபிடிக்கவில்லை. பல அரசு அலுவலகங்களில் இந்த விழிப்புணர்வு பலகைகள் சரிவர வைக்கப்படவில்லை என்பது குறித்து தற்போதைய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்தே, தற்போது வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால் அரசு ஊழியர்கள் மீது ஆண்டுக்கு 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் புகார்கள் வருகின்றன. ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான புகார்களை பிரித்துக்கூட பார்க்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் புகார் எண் பெற்று, அதையும் அப்படியே கிடப்பில் போடுவதற்காகவா இந்த எண் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories: