×

புழல் 23வது வார்டில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சீரமைக்காவிட்டால் போராட முடிவு

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டு பகுதியான மகாவீரர் கார்டன் 2வது தெரு, ரேஷன் கடை அருகில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக உடைப்பு ஏற்பட்ட பைப்லைன் வழியாக குடிநீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. மேலும், அங்குள்ள சாலையில் குடிநீர் தேங்குவதுடன் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து 23வது வார்டு மாநகராட்சி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய அலுவலகத்திலும் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனினும், உடைப்பு ஏற்பட்டுள்ள பைப்லைனை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் ஏற்கெனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பைப்லைன் உடைப்பை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்காவிட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Puzhal 23rd ward ,Puzhal ,Mahaveerar Garden 2nd Street, ,Madhavaram ,Chennai Corporation ,
× RELATED சென்னையில் 15 நாளில் 65 பேருக்கு டெங்கு...