தஞ்சை: பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்து தீயை அணைத்து வருகின்றனர். பெரும் தீப்பிழம்புடன் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து வருவதால் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேமித்து தரம் பிரிக்கும் கிடங்கு பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நைனாங்குளம் பகுதியில் உள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் சுமார் 1 ஏக்கர் அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரித்து கழிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவி குப்பைக் கிடங்கு முழுவதும் பரவியது. மேலும் பெரும் தீப்பிழம்புடன் குப்பைகள் தீப்பிடித்து எரிந்தது. அருகில் யாருமே செல்ல முடியாத அளவிற்கு பயங்கர தீ விபத்தாக இருந்து வருகிறது. உடனடியாக இது குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தீயணைப்புத்துறையினர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் குப்பைக் கிடங்கில் பெரும் தீப்பிழம்புடன் குப்பைகள் எரிந்து கொண்டிருப்பதால் தீயை போராடி அணைத்து வருகின்றனர். இதனிடையே பேராவூரணி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்துவந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கனிராஜ், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்டோர் விரைந்துவந்து பார்வையிட்டனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கனிராஜிடம் கேட்டபோது, நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் தீப்பிடிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் இந்த குப்பைக் கிடங்கில் எப்படி தீப்பிடித்தது? என்பதை விசாரித்து வருகின்றோம் என தெரிவித்தார்.
