×

முதல்வர் அந்தஸ்துக்கு வரவில்லை என்பதை காட்டும் கரூர் பேச்சு; அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி விலைக்கு வாங்கும் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் காட்டம்

 

ஓமலூர்: அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி விலைக்கு வாங்கும் தவெக தலைவர் விஜய்தான் களவாணி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய தினம் தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மேகதாது அணை கட்டுவதற்கு தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தனர். ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறி இருக்கிறது.

இந்த தீர்ப்பில் காவிரி நீரை தடுக்கவோ, தேக்கி வைக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது நடுவர் மன்றம் தேவையற்றது. தற்போது டெல்டா விவசாயிகளிடம் மிகப்பெரிய அச்சத்தை இந்த அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் கரூரில் பேசிய முதல்வர் விஜய், அதிமுகவும் திமுகவும் கூட்டு களவாணிகள் என்று தெரிவித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய வார்த்தை. அவர் வகிக்கின்ற பொறுப்புக்கு சரியா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் முதலமைச்சராக இருக்கிறார். எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என யோசித்து பயன்படுத்த வேண்டும். எங்களை பொறுத்தவரை தவெக தலைவர் விஜய் தான் களவாணி.

அதிமுகவில் வெற்றி பெற்றவர்களிடம் பேரம் பேசி, விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து, பின்னர், அவரது கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்தவகையில் அவர் தான் களவாணி. குற்றம் செய்தவர்களை எல்லாம் அவரது கட்சியில் சேர்த்து வருகிறார். 60 நாளில் இந்த ஆட்சி என்ன சாதித்தது? சிங்கப்பெண் அதிரடி படை என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இரவில் பிரச்னை என்றால் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு யார் பாதுகாப்பு தருவது? கரூர் பேச்சிலிருந்து விஜய் இன்னும் முதலமைச்சர் அந்தஸ்துக்கு வரவில்லை என்பது தெரிகிறது. பஞ்ச் டயலாக் மட்டுமே பேசுகிறார். ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அவர் பேச வேண்டும். கட்சி வெற்றி பெற்ற பிறகு இதுவரை யாரும் இப்படி நடந்தது இல்லை. இப்போது அவரது ஆட்சி நாற்காலியில் இரண்டு கால் தான் உள்ளது.

ஒரு கால் விழுந்தால் என்னவாகும்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவரது கூட்டணியில் உள்ள தலைவர்கள் தினம்தோறும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருகிறார்கள். இவர் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை. மற்ற கட்சிகளில் வெற்றி பெற்றவர்களை இரவல் வாங்கி, ஆட்சி நடத்துகிறார்.
இரண்டு திராவிட கட்சிகளும் சரியில்லை என கூறியவர், இப்போது அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை தான் சேர்த்துக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் தினம்தோறும் ஒரு கருத்தை சொல்கிறார். அவர் கூறுவது கட்டுக்கதை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை எப்ேபாதும் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதிமுகவை பொறுத்தவரை குறுகிய வட்டத்தில் யாரும் இல்லை. தற்போது 30, 40 பேர் பொறுப்பாளராக உள்ளனர். இவர்களில் ஒன்றிரண்டு பேர் வெளியேறுகிறார்கள். வேறு இடத்துக்குச் சென்றால் மந்திரி பதவி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன் சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக எம்எல்ஏக்களை பேரம் பேசி இழுக்கும் ஒரிஜினல் களவாணியே விஜய்தான். திமுக கூட்டணி கட்சிகளின் தயவால்தான் விஜய் ஆட்சி நடத்துகிறார். அவர்கள் காலை வாரினால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். கரூர் வழக்கில் சிபிஐ ஒருவரை தூக்கினால் தவெக ஆட்சி குளோஸ் ஆகிடும்’’ என்று பேசியிருந்தார். தற்போது மீண்டும் முதல்வர் விஜய்தான் களவாணி என்று எடப்பாடி பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கழுதை ேதய்ந்து கட்டெறும்பான காங்கிரஸ் கட்சி
‘‘தமிழக காங்கிரசின் நிலை பரிதாபமாக உள்ளது. அது கழுதை ேதய்ந்து கட்டெறும்பான கட்சி. அவர்கள் திமுக கூட்டணியில் நின்று ஜெயித்தார்கள். முன்பு கொள்கை கூட்டணி, பலமான கூட்டணி என்றார்கள். இப்போது என்ன ஆனது? திமுக தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சுயலாபத்திற்காக மாற்று அணிக்கு சென்று பதவி வாங்கி இருக்கிறார்கள். இதில் என்ன கொள்கை இருக்கிறது?’’ என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Tags : Karur ,Kalavani ,Adimuka MLAs ,Edappadi Palanisami ,Omalur ,Minister General ,Dweka ,Vijaythan Kalavani ,Adimuka District Office ,Salem District ,Salem Suburban District ,
× RELATED ஜெயக்குமாரின் குட்டி ஸ்டோரி..! வெயில்...