டெல்லி: கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 654 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதில், 54 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்தப் பணி நியமனத்தை எதிர்த்து, 2016 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி, தேர்வு நடைமுறையில் பங்கேற்காத நிலையில் இந்த பணி நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர உரிமையில்லை என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஈஸ்வரி உள்ளிட்ட 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவில், உரிய தகுதிகள் இருந்தும் இந்தப் பணி நியமனம் குறித்து முறையாக விளம்பரம் செய்யப்படாததால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வில் கலந்துகொள்ள முடியவில்லை. விதிமுறைகள் மற்றும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஒரே நாளில் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, புறவாசல் வழியாக இந்த நியமனம் நடந்துள்ளதாகக் கூறி பணி நியமனத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த பணி நியமனங்கள் சட்ட விரோதமானவை என்று கூறி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கோவையில் 54 இளநிலை உதவியாளர்களை பணி நியமனம் செய்தது சட்டவிரோதம் என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. இதன் மூலமாக கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் சட்டவிரோதம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
