×

ஸ்ரீ ராமகிருஷ்ணரை பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர்..

பகுதி 2

இறைவனைப் பற்றிய பேச்சைத் தவிர வேறு எதுவுமே எனக்குச் சுவைக்கவில்லை. உலகியல் விஷயங்கள் காதில் விழுந்தால் உட்கார்ந்து அழுவேன்.நான் பஞ்சவடிக்கு அருகில் கங்கைக்கரையில், ‘பணம்-மண், பணமே மண், மண்ணே பணம்’ என்று ஆராய்ச்சி செய்து, பணத்தை கங்கையில் எறிந்தபோது சிறிது பயம் ஏற்பட்டது. நான் மகாலட்சுமியை விட்டு விட்டேனோ? அவள் என் சாப்பாட்டை முடக்கி விட்டால் என்ன செய்வது? உடனே, ஹாஸ்ராவைப்போல் நானும் ஒரு தந்திரம் கண்டுபிடித்தேன்; ‘அம்மா, நீ என் இதயத்தில் தங்கு!’ என்று கூறிவிட்டேன்.

எனக்கு அந்த நிலை வந்தபிறகு என்னால் பூஜை முதலியவற்றைச் செய்ய முடியாமல் போயிற்று. அப்போது நான் தேவியிடம், ‘அம்மா! என்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்னை நானே கவனித்துக் கொள்வதற்கான சக்தி என்னிடம் இல்லையே! உன் பேச்சைக் கேட்க விரும்புகிறேன்; பக்தர்களுக்கு உணவளிக்க விரும்புகிறேன். என் முன்னால் யாராவது எதிர்ப்பட்டால் அவருக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்.

அம்மா, இதெல்லாம் எப்படி நடக்கும்! ஒரு பெரிய மனிதரை எனக்குத் தா’ என்று கேட்டேன். அதனால் அல்லவா மதுர்பாபு இவ்வளவு சேவை செய்தார்! காளி கட்டத்தில் வசிக்கும் சந்திர ஹல்தார் மதுர்பாபுவிடம் அடிக்கடி வருவான். நான் இருளில் தரையில் பரவச நிலையில் விழுந்து கிடந்தேன். நான் இப்படி வேஷம் போட்டு மதுர்பாபுவின் அன்பைப் பெற விரும்புகிறேன் என்று அவன் நினைத்தான். அந்த இருட்டில் வந்து தன் பூட்ஸ் காலால் என்னை உதைத்தான்! உடலில் தழும்பு விழும் அளவிற்குக் காயம் ஏற்பட்டது. மதுர்பாபுவிடம் கூற வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். நான் அவர்களைத் தடுத்து விட்டேன்.

பக்தி மட்டும் வேண்டும் என்றே நான் அன்னையிடம் கேட்டேன். அன்னையின் பாத கமலங்களில் மலரிட்டு, கைகூப்பி, ‘அம்மா, இதோ உன் அஞ்ஞானம் எடுத்துக் கொள், எனக்கு சுத்த பக்தியைத் தா. இதோ உன் ஞானத்தை எடுத்துக் கொள், எனக்கு சுத்த பக்தியைத் தா. இதோ உனது சுத்தத்தை எடுத்துக் கொள், இதோ உனது அசுத்தத்தை எடுத்துக் கொள், எனக்கு சுத்த பக்தியைத் தா. இதோ உனது பாவத்தை எடுத்துக் கொள், இதோ உனது புண்ணியத்தை எடுத்துக் கொள், எனக்கு சுத்த பக்தியைத் தா. இதோ உனது நல்லதை எடுத்துக் கொள், இதோ உனது கெட்டதை எடுத்துக் கொள், எனக்கு சுத்த பக்தியைத் தா. இதோ உனது தர்மத்தை எடுத்துக் கொள், இதோ உனது அதர்மத்தை எடுத்துக் கொள். எனக்கு சுத்த பக்தியைத் தா’ என்று வேண்டினேன்.

பார்த்தாயா, ஞானத்தைக்கூட நான் விரும்பவில்லை. நான் புகழையும் விரும்பவில்லை. தர்ம அதர்மங்களை விட்டுவிட்டால் சுத்த பக்தி, மாசு மறுவற்ற, பற்றற்ற, காரணமற்ற பக்தி மட்டுமே எஞ்சுகிறது. இதையெல்லாம் சொன்னேன். ஆனால், ‘அம்மா, இதோ உனது சத்தியம், எடுத்துக் கொள், இதோ உன் பொய், எடுத்துக் கொள்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் தேவியிடம் கொடுக்க முடிந்தது. ஆனால் உண்மையை மட்டும் கொடுக்க முடியவில்லை.

உண்மை பேசுவது கலியுகத்தில் ஒரு தவமாகும். மற்ற தவங்களைச் செய்வது கலியுகத்தில் கடினம். உண்மையில் நிலை நின்றால் இறைவனைப் பெறலாம். இறைப் பித்து பிடித்த நாட்களில், மனத்தில் தோன்று வதை அப்படியே சொல்லி விடுவேன். யாரையும் மதிக்க மாட்டேன். பெரிய மனிதர்களைக் கண்டாலும் பயம் எதுவும் தோன்றியதில்லை.யதுமல்லிக்கின் தோட்டத்திற்கு யதீந்திரர் வந்தார்.

அப்போது அங்கிருந்த நான் அவரிடம், ‘எது கடமை? பகவானை நினைப்பதுதானே நமது கடமை?’ என்று கேட்டேன். அதற்கு யதீந்திரர், ‘நாங்கள் சம்சாரிகள். எங்களுக்கு முக்தியா! தர்மபுத்திரருக்கே நரகத்தைப் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதே!’ என்றார். அதைக் கேட்டு எனக்கு பயங்கரமான கோபம் வந்தது. ‘என்ன மனிதர் நீங்கள்! தர்மபுத்திரர் நரகத்தைப் பார்த்ததை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே! அவரது சத்திய நிஷ்டை, மன்னிக்கும் தன்மை, பொறுமை, விவேகம், வைராக்கியம், பக்தி இவையெல்லாம் உங்கள் மனதில் படவில்லையா!’ என்று ஆத்திரத்துடன் கேட்டேன். இன்னும் என்னென்னவோ சொல்லியிருப்பேன். ஹிருதயன் என் வாயைப் பொத்தி விட்டான். கொஞ்ச நேரத்தில் யதீந்திரர், ‘எனக்குச் சிறிது வேலை இருக்கிறது’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து போய் விட்டார்.

எனக்கு இறைப்பித்துப் பிடித்திருந்த அந்த நாட்களில் ஒருநாள் வராகநகர் படித்துறையில் ஜயமுகர்ஜியைக் கண்டேன். அவர் ஜபம் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவரது மனம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது. அருகில் சென்று இரண்டு அறை விட்டேன்.ஒரு சமயம் ராசமணி வந்திருந்தார். காளிதேவியின் திருச்சந்நிதிக்கு வந்தார். பூஜை வேளையில் வருவார். இரண்டொரு பாட்டுக்கள் பாடும்படி கேட்டுக் கொள்வார். அன்றும் அவ்வாறு நான் பாடினேன். ஆனால் அவர் ஏதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்தார். அவ்வளவுதான், இரண்டு அறை விட்டேன். திடுக்கிட்டுப் போன அவர் இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஹலதாரியிடம், ‘அண்ணா! இது என்ன பழக்கம்! நான் என்ன செய்வேன்!’ என்று சொன்னேன். பிறகு தேவியிடம் திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய்த பிறகுதான் இந்தப் பழக்கம் நீங்கியது.
இரவில் மதுர்பாபுவும் அவரது மனைவியும் உறங்கும் அறையிலேயே நானும் படுத்துக் கொள்வேன். தங்கள் சொந்தக் குழந்தையைப் போல் அவர்கள் என்னைக் கவனித்துக் கொண்டார்கள். அப்போது நான் பித்துப் பிடித்த நிலையில் இருந்தேன். மதுர்பாபு என்னிடம், ‘பாபா! நாங்கள் பேசிய எதையாவது நீங்கள் கேட்டீர்களா?’ என்று கேட்பார். நான் ‘ஆம்’ என்று கூறுவேன்.

ஒரு சமயம் மதுர்பாபுவின் மனைவிக்குக் கணவனின் நடத்தையில் சந்தேகம் தோன்றியது. அதனால் அவர் மதுரிடம், ‘நீங்கள் வெளியே எங்கு சென்றாலும் நம் பட்டாச்சாரியரும் கூட வருவார்’ என்று கூறிவிட்டாள். ஒருநாள் அவருடன் சென்றபோது என்னைக் கீழே ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டு மாடிக்குச் சென்றார் மதுர்பாபு.

அரை மணி நேரம் கழித்து வந்து, ‘பாபா! வாருங்கள் போகலாம். வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள்’ என்றார். வீட்டிற்குத் திரும்பியதும் மதுர்பாபுவின் மனைவி கேட்டபோது, நடந்தவை அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ‘நாங்கள் ஒரு வீட்டிற்குப் போனோம். மதுர் என்னைக் கீழே உட்கார வைத்துவிட்டு மாடிக்குச் சென்றார். அரைமணி நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்து, ‘‘பாபா, போகலாம்’’ என்றார். என்று சொன்னேன். அவள் எதையோ புரிந்துகொண்டாள்.

மதுரின் பங்காளி ஒருவன் கோயில் தோட்டத்திலிருந்து பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வண்டியில் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்வான். மற்ற பங்காளிகள் இது பற்றிக் கேட்டபோது நான் நடந்ததை நடந்தவாறே சொல்லி விட்டேன்.எனக்கும் பித்து நிலை ஏற்பட்டது! நாராயண சாஸ்திரி வந்து பார்த்தார். தோளில் ஒரு மூங்கில் கழியுமாக நான் அலைந்து கொண்டிருந்தேன். உடனே அவர் மற்றவர்களிடம், ‘இது ஒரு பைத்தியம்’ என்று கூறினார்.

காளிகோயிலில் பிச்சைக்காரர்கள் சாப்பிட்டுச் செல்வார்கள். அவர்களின் எச்சில் இலைகளை எடுத்து என் தலையிலும் வாயிலும் தொட்டுக் கொண்டேன். இதைக் கண்ட ஹலதாரி என்னிடம், ‘நீ என்ன காரியம் செய்கிறாய்! பிச்சைக் காரர்களின் எச்சிலைத் தின்று விட்டாயே! உன் பிள்ளைக்குட்டிகளுக்கு எப்படித் திருமணம் நடக்கும்?’ என்று கேட்டார்.

எனக்குக் கோபம் வந்துவிட்டது. ஹலதாரி எனக்கு அண்ணன் முறை. அதனால் என்ன? அவரிடம், ‘டேய் துஷ்டா! கீதை, வேதாந்தம் எல்லாம் படிப்பது நீ அல்லவா? பிரம்ம ஸத்யம், ஜகத் மித்யா என்று போதிப்பது நீதானே! நான் பிள்ளைகுட்டிகளைப் பெற்றுக் கொள்வேன் என்றா நினைக்கிறாய்? கீதை பேசும் உன் வாயில் கொள்ளிதான் வைக்க வேண்டும்!’ என்று பொரிந்து தள்ளி விட்டேன்.

எனது இப்போதைய நிலையில் இறைவனுக்குப் படைக்கப்படாத உணவைச் சாப்பிட முடியாது. முன்பு ஒரு நிலையில் தட்சிணேசுவரத்தின் எதிர்க்கரையில் பிணங்கள் எரிகின்ற துர்நாற்றம் கலந்து வருகின்ற காற்றை இழுத்து நுகர்வேன். அது அவ்வளவு இனிமையாக இருக்கும். இப்போதோ எல்லோரிடமிருந்தும் என்னால் உணவு ஏற்கவும் இயல்வதில்லை.

காற்று வாங்குவதற்காகச் சில நாட்கள் மதுர்பாபுவுடன் படகில் பயணம் செய்தேன். நவத்வீபத்திற்கும் சென்றோம். படகோட்டிகள் படகிலேயே சமையல் செய்தனர். நான் அவர்களின் அருகில் நின்று கொண்டிருந்தேன். அதைக் கண்ட மதுர்பாபு என்னிடம், ‘பாபா, அங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் சிரித்தபடியே, ‘படகோட்டிகளின் சமையல் நன்றாக இருக்கிறது’ என்றேன்.

எங்கே அந்தப் படகோட்டிகளிடமிருந்து சாப்பி்டுட விடுவேனோ என்று எண்ணிய அவர் உடனே என்னிடம், ‘பாபா, வந்துவிடுங்கள், வந்து விடுங்கள்’ என்று கூறினார். குமார்சிங் ஒரு சமயம் சாதுக்களுக்கு விருந்து வைத்தார்.

என்னையும் அழைத்தார். சாதுக்கள் பலர் அங்கு வந்திருந்ததைக் கண்டேன். நான் சாப்பிடுவதற்கு உட்கார்ந்ததும் சாதுக்கள் சிலர் என்னைப் பற்றி ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு அவர்கள் என்னை விசாரிக்க ஆரம்பித்ததும் நான் அவர்களை விட்டுத் தனியாகப்போய் வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். ‘இதையெல்லாம் தெரிந்து கொள்வதால் அவர்களுக்கு என்ன லாபம்’ என்று நினைத்தேன்.

அதன் பிறகு இலை போட்டு எல்லோரையும் சாப்பிடுவதற்கு உட்கார வைத்தார்கள். யாரும் எதுவும் சொல்வதற்கு முன் நான் சாப்பிடத் தொடங்கி விட்டேன். அங்கிருந்த சாதுக்களில் சிலர், ‘யார் இவன்?’ என்று பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது.

நன்றி:ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

 

Tags : Sri Ramakrishna ,God ,Gangakkara ,Panchawadi ,Ganga ,
× RELATED ஆஷாட நவராத்திரியில் வாராஹியை துதிப்போம்!