நல்லூர், ஜூலை 14: செய்துங்கநல்லூர் -ஆழ்வார்திருநகரி இடையே புதிய பைபாஸ் சாலையோரம் வளர்ந்திருந்த முட்செடிகள், தினகரன் செய்தி எதிரொலியாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது.நெல்லை – திருச்செந்தூர் சாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆழ்வார்திருநகரி வரையிலான அமைக்கப்பட்டுள்ள புதிய பைபாஸ் சாலையின் ஓரங்களில் பாதுகாப்பு தடுப்பு இரும்பு வேலிகளைத் தாண்டி முட்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வந்தது. இதுகுறித்து கடந்த ஜூன் 29ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் முதல் வைகுண்டம் புதிய பைபாஸ் சாலை வரை சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த முட்செடிகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறையினருக்கும், பொதுமக்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகுத்த தினகரனுக்கும் நன்றி தெரிவித்தனர்.இதேபோல், கருங்குளம் முதல் செய்துங்கநல்லூர் வரை சாலை ஓரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகளையும் விரைவாக அகற்றி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
