×

அந்தியூர், பவானிசாகர் யூனியனில் ஊதிய உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் மனு

ஈரோடு, ஜூலை 14: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தூய்மை பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் அந்தியூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் 2010ம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.9,200 வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் 2010ம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.11,400 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2013ம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.7,300 வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் மற்ற ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் 2013ம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.9,600 வழங்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுபீர்கடவு ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஊதியம் குறைவாக வழங்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர், புதுபீர்க்கடவு ஊராட்சிக்கு கடிதம் மூலமாக ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனால், இதுநாள் வரை ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத்தொகை மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இண்டியம்பாளையம் ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு, 17.02.2026-ன் படி ஊதிய உயர்வு ரூ.6,700 பிப்ரவரி மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள் வரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு, தற்போதைய ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Tags : Anthiyur ,Bhavanisagar union ,Erode ,Erode District Collector ,Bhavanisagar ,Anthiyur union ,Erode district ,
× RELATED 15 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பறிமுதல்