- சபை
- நெஸ்லின் ரியா
- அலெக்சாண்டர்
- அதிப்பட்டு செல்லியம்மன் நகர்
- அம்பத்தூர்
- சென்னை திருப்பதி தேசிய மருத்துவமனை
அம்பத்தூர்: அம்பத்தூர், அத்திப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் 5 வயது மகள் நெஸ்லின் ரியா. இச்சிறுமிக்கு, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அம்பத்தூர் – சென்னை திருப்பதி தேசிய சாலையில் உள்ள தேஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நெஸ்லின் ரியா, மறுநாள் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், எனது 5 வயது மகளுக்கு, உரிய நிபுணத்துவம் இல்லாத நிலையில், டாக்டர் சரோஜினி மற்றும் டாக்டர் ராஜா திக் விஜய்தேஜா ஆகியோர் தன்னிச்சையாக சிகிச்சை அளித்தனர். இது நிலையான மருத்துவ நெறிமுறைகளை மீறிய கடுமையான அலட்சிய செயலாகும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.அதன்பேரில், போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். வழக்கை சட்டப்பூர்வமாக அணுகிய காவல் துறை, இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் அறிக்கை கோரியது. மருத்துவக் கவுன்சில் சமர்ப்பித்த அறிக்கையில், மருத்துவமனையின் அலட்சியப்போக்கு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஆவடி காவல் ஆணையரகத்தின் சட்ட ஆலோசகரிடம் உரிய ஒப்புதல் பெறப்பட்டு, மே மாதம் 8ம் தேதி அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன்ராஜ், தேஜா மருத்துவமனையின் மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய்தேஜா ஆகிய இருவர் மீதும், அலட்சியமாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் – பினையற்ற பிரிவின் கீழ், கடந்த 8ம் தேதி, அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவ கவுன்சில் அறுவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் அடுத்த எறையாமங்கலம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை, வருவாய் கோட்ட அலுவலர் சு.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரண்யா, அம்பத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ், வருவாய் ஆய்வாளர் பிராங்க்ளின் பீனா, கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர் பால மணிகண்டன் பிரேத பரிசோதனை செய்தார். இதில் பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கையை வைத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
