தவறாக பயன்படுத்தப்படும் போக்சோ; காதலித்து ஓடிப் போகும் இளசுகளை எப்படி தடுப்பது?.. உச்ச நீதிமன்றம் கவலை

 

புதுடெல்லி: காதலித்து விருப்பத்துடன் வீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் ஆண், பெண்களை அரசு எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்தது. 17 வயதுக்கு உட்பட்ட சிறுமியை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட 25 வயது இளைஞர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை கடந்த 2023ல் விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் ‘இளம்பெண்கள் தங்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என தீர்ப்பளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் மாதவி திவான், சம்மந்தப்பட்ட சிறுமி, 25 வயது காதலனுடன் திருமணம் செய்து குழந்தை பெற்று சந்தோசமாக வாழ்வதாக குறிப்பிட்டார். அதே சமயம் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய அமைப்பு தேவை என வலியுறுத்தினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘15 முதல் 18 வயது வரை மிகவும் உணர்வுப்பூர்வமான பருவம். இந்த வயதில் ஏற்படும் ஒவ்வொரு உறவையும் போக்சோ வழக்காக கருத முடியுமா? இளம் வயதினர் காதலித்து விருப்பத்துடன் வீட்டை விட்டு ஓடிப் போவதை அரசு எப்படி தடுக்க முடியும்? ஆனால், குடும்ப கவுரவத்தை பாதுகாக்கும் பொருட்டு பெற்றோர் குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது வழக்கமாகி விட்டது’’ எனக் கூறி விசாரணையை வருமு் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: