சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேடு: கண்டித்து தேர்வர்கள் போராட்டம்

 

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை-II தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், அதனை முழுமையாக விசாரணை செய்யாமல் பணி ஆணைகள் வழங்கக் கூடாது எனவும் கூறி தேர்வு எழுதியவர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கை அடங்கிய மனுவை டி.பி.ஹெச் அதிகாரியிடம் வழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட தீர்த்தகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தேர்விற்கு முன் உரிய பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளவில்லை. பல மையங்களில் கணினி கோளாறால் தேர்வு தாமதமாக தொடங்கியது. தேர்வர்களின் இருக்கைகளுக்கு இடையே தடுப்புச் சுவர்கள் இல்லாததால் மற்றவர்களின் திரையை பார்க்கும் சூழல் ஏற்பட்டது.

மேலும், சில தேர்வு மையங்களில் உதவி கண்காணிப்பாளர்களாக கல்லூரி மாணவர்கள் நியமிக்கப்பட்டதால், அவர்கள் முறையாக கண்காணிக்காமல் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் பார்த்தும் கேட்டும் தேர்வு எழுதியுள்ளனர். புதுக்கோட்டை தேர்வு மையத்தில் செல்போன் மூலம் தேர்வர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 தேர்வர்கள் மற்றும் 2 உதவி கண்காணிப்பாளர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்ற நேரத்தில் கணினியில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.

தேர்வு நடந்த நேரத்தில் சோதனைக் குழு (Flyi*g Squad) பெரும்பாலான தேர்வு மையங்களை ஆய்வு செய்யவில்லை. இதன் காரணமாக முறைகேடுகள் தடுக்கப்படாமல் நடைபெற்றுள்ளன. இந்த குற்றசாட்டுகள் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் வரை சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: