மதுபான விடுதியில் தீ விபத்து- 27 பேர் பலி: தாய்லாந்தில் சோகம்

 

பாங்காக்: தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ‘ராங் பீர் நா லாட் ப்ராவ்’ என்ற புகழ்பெற்ற மதுபானக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்க தொடங்கி உள்ளது. திடீரென கரும்புகை வெளியேறியதை அங்கிருந்தவர்கள் பார்த்த அடுத்த சில நொடிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விளக்குகள் அணைந்த நிலையில், பலத்த சத்தத்துடன் பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த கரும்புகை அந்த அரங்கு முழுவதும் சூழ்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தப்பிக்க வழியின்றி அலறியடித்துக் கொண்டு பின்புறத்தில் இருந்த கழிவறையை நோக்கி ஓடினர். ஆனால், அங்கு முறையான அவசரக்கால தீயணைப்பு கதவுகள் இல்லாததாலும், அவசரக்கால வெளியேறும் வழிகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் பலரால் வெளியேற முடியவில்லை என தெரிகின்றது. பெரும்பாலானோர் அடர்ந்த புகையினால் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 63 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 22 பேர் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து, தாய்லாந்து பிரதமர் அனூடின் சார்ன்விராகுல் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து நடந்த கட்டிடத்தின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

பாங்காக் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபண்ட் இந்த மதுபானக்கூடம் முறையான உரிமம் பெற்று இயங்கி வந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவசரக்கால பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related Stories: