×

பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் விபரீதம்; ராட்சத இரும்பு தகடு விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி

சென்னை: புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் ராட்சத இரும்பு தகடு விழுந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான். விபத்திற்கு காரணமான துணை ஒப்பந்ததாரர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி, 23வது வார்டு புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்ட பணிகளுக்காக ராட்சத தொட்டி மற்றும் ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிரேன் மூலம் ராட்சத இரும்பு தகடு மேலே தூக்கப்பட்டு பணிகள் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த ரோப் அறுந்து ராட்சத இரும்பு தகடு அவ்வழியே வந்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் 3 வயது மகன் ஷாருக்ஈஸ்வரன் மீது விழுந்தது. இதில், வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் அடைந்தான். இதைக் கண்டு அவரது தந்தை விக்னேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதற்கிடையே விபத்து நடந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் தனியார் பேக்கரி அருகே மகனை அழைத்துக் கொண்டு தந்தை நடந்து வந்தபோது கிரேன் இயந்திரத்தில் இருந்து ராட்சத இரும்பு தகடு குழந்தையின் மீது விழுந்த காட்சிகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து புழல் காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். துணை ஒப்பந்ததாரர் திலீப் பாரிக் (40), பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் திட்ட மேலாளர் முத்துகுமார் (38), துணை திட்ட மேலாளர் அருட்செல்வன் (42), மேற்பார்வையாளர் வெங்கடேசன் (45), கிரேன் ஆபரேட்டர் ரமேஷ் (50) ஆகிய 5 பேரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் பணியில் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தது, கொலையில்லாத மரணம் என 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். பிறகு மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags : Chennai ,Puzhal ,
× RELATED சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி...