கன்சாஸ் சிட்டி: நடப்பு உலக கோப்பை தொடரின் கடைசி காலிறுதியில் சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் வீழ்த்திய அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கன்சாஸ் சிட்டி அரங்கில் நடந்த இப்போட்டியின் 10வது நிமிடத்திலேயே கேப்டன் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கை அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் உயரே எகிறிப்பாய்ந்து தலையால் முட்டி கோலாக்க, அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது, இடைவேளை வரை இதே நிலை நீடிக்க, 2வது பாதியில் சுவிஸ் வீரர் டான் டோயே 67வது நிமிடத்தில் பதில் கோல் போட்டு நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்தார்.
எனினும் 72வது நிமிடத்தில் பிரீல் எம்போலோ ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது சுவிஸ் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. ஆட்ட நேர முடிவிலும் 1-1 என சமநிலை நீடித்ததால் 30 நிமிட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த எக்ஸ்ட்ரா டைம் ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் (112வது நிமிடம்), லதாரோ மார்டினஸ் (120’+1’) கோல் அடித்து அசத்தினர்.
பதில் கோல் அடிக்க சுவிஸ் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. கடைசி கட்டத்தில் 10 பேருடன் விளையாட வேண்டிய நெருக்கடியால் சுவிஸ் சரணடைய, கூடுதல் நேர முடிவில் அர்ஜென்டினா 3-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஜூலியன் அல்வாரெஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
* செனகல் பயிற்சியாளருக்கு கல்தா
உலக கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் பெல்ஜியம் அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் போராடி தோற்றது செனகல் அணி. இதைத் தொடர்ந்து, செனகல் அணி தலைமை பயிற்சியாளர் பாபே தயாவ் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவதாக அந்நாட்டு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
* விதியால் வீழ்ந்ததா சுவிஸ்?
நடப்பு உலக கோப்பை தொடருக்கு முன்பாக கால்பந்து விளையாட்டின் சில விதிகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நடுவர் தவறான வீரருக்கு மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காட்டினால், அல்லது அதில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் வீடியோ உதவி நடுவரை அணுகலாம். அப்படி மிஸ்டேக்கன் ஐடென்டிடி விதியின் கீழ் வீஏஆர் வழங்கிய ஆலோசனையின்படியே சுவிஸ் வீரர் டான் டோயே வெளியேற்றப்பட நேரிட்டது.
இது போன்ற பைத்தியக்காரத்தனமான விதிகளை நீக்க வேண்டும். வீஏஆர் உதவியால் குழப்பங்களுக்கு தீர்வு கிடைப்பதை விட, ஒரு தரப்புக்கு பாதகமாக மாறி இடியாப்பச் சிக்கலில் தவிக்க விடுவதாக உள்ளது, அந்த விதிதான் எங்கள் வெற்றியை பறித்துவிட்டது என்று சுவிஸ் பயிற்சியாளர் முராட் யாகின் புலம்பி வருகிறார். ஏற்கனவே நடுவர்களும், ஃபிபா அமைப்பும் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், சுவிஸ் அணிக்கு எதிரான காலிறுதி வெற்றியிலும் சர்ச்சை வெடித்துள்ளது.
