சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு: 15ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறார்

சென்னை: சிங்கப்பூரில் இருந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று சென்னை திரும்பினார். ஏற்கனவே திட்டமிட்டபடி மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்ததாகவும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு வரும் 15ம் தேதி நிச்சயம் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 25ம் தேதி தமிழகம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடத்தியது.
​​
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் நேரடியாக விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. எ.வ.வேலு தரப்பிலிருந்து விளக்க மனு ஒன்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர். அதில், நான் 27.6.2026 முதல் சிங்கப்பூரில் உள்ள லைப்லைன் ஹியர்ட் சென்டரில் இதய தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சைக்கு பின் தங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரிலிருந்து நேற்று மதியம் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 2016ம் ஆண்டு முதல் நான் சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், இதயம் தொடர்பான சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் உடல்நிலை பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல முடிவு செய்து, கடந்த மாதம் 15ம் தேதி விசாவுக்கு விண்ணப்பித்தேன். 17ம் தேதி விசா கிடைத்ததும் 25ம் தேதி இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். ஆனால் 25ம் தேதி காலை என் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன்.

அன்றைய பயணத்தை ரத்து செய்து, மறுநாள் 26ம் தேதி சிங்கப்பூர் சென்றேன். நான் சிகிச்சை பெற்றதற்கான, அனைத்து மருத்துவ ஆவணங்களும், மருத்துவர்களின் அறிக்கைகளும் என்னிடம் உள்ளன. சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனையில் இருந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதாக தகவல் கிடைத்தது. உடனடியாக வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி மருத்துவ பரிசோதனையில் இருப்பதால் 10 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.

ஓடுறாங்க, ஒளியுறாங்க, பதுங்குறாங்க என்ற குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. நான் மருத்துவ சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் சென்றேன். யாருக்கும் பயந்து செல்லவில்லை. என்னை தனிப்பட்ட முறையில் குறிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக சட்டப்பேரவை கொறடாவாக கட்சித் தலைவர் என்னை நியமித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சார்பில், அரசிடம் கேள்வி எழுப்புவதும், கருத்து தெரிவிப்பதும் எனது கடமை.

அந்த கடமையை தான் செய்து வருகிறேன். அது சிலருக்கு பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது வேறு விஷயம். ஜூலை 15ம் தேதி விசாரணைக்கு நிச்சயம் ஆஜராவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் விவரங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க. நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.

Related Stories: