சென்னை: தேர்தலுக்கு முன்னர் மாதம் ஒருமுறை தொகுதிக்கு வருவேன் என்று சொன்ன நிலையில், ஆட்சியமைத்து இரண்டு மாதங்கள் கழித்து முதல் முறையாகத் தனது தொகுதிக்குச் செல்லும் முதல்வர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார். முதல்வர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதில், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பெரம்பூர் எம்எல்ஏவாகத் தொடர்கிறார். திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தவுடன் அங்கு நேரில் சென்று அந்தத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் முதல்வரான பிறகு விஜய் முதல் முறையாகத் தனது தொகுதியான பெரம்பூருக்கு இன்று செல்கிறார். அவருக்கு தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இன்று மாலை 3 மணிக்கு அங்கு செல்லத் திட்டமிட்டுள்ள விஜய், முதலில் வியாசர்பாடி, சர்மாநகர் பகுதியில் உள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தெரிவிக்கும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப்பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவி, வேலை வாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியிலான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான விஜய்யின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது. பிரத்யேக செல்போன் செயலியை அறிமுகம் செய்து வைக்கிறார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்து, புதிதாக ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் மற்றும் பொதுமக்களுக்குப் பட்டா ஆகியவற்றையும் வழங்குகிறார். அதேபோல், பெரம்பூர் தொகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்யவுள்ளார்.
இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தவெக தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்வில் பேசிய விஜய், எனது தொகுதிக்கு நான் மாதம் ஒருமுறை வருவேன் எனத் தெரிவித்து இருந்தார். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்த பிறகு இப்போதுதான் முதல் முறையாகத் தனது தொகுதிக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
