சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாளுக்கு இயல்பை விட வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: இன்று முதல் 16ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வருகிற 15, 16ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* உலகளவில் மதுரைக்கு 7வது இடம்
உலகளவில் வெப்ப அலையில் அதிக ஆபத்திற்குரிய நகரமாக மேற்காசிய நாடான ஈராக்கின் அல் பஸ்ரா முதலிடம் பிடித்தது. குஜராத்தின் ஆமதாபாத் 2வது இடத்திலும், மூன்றாம் இடத்தில் மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் பமாகோவும் உள்ளன. இப்பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் 50 நகரங்கள் பட்டியலில் மதுரை 7வது இடம், சென்னை 49வது இடம், பெங்களூரூ 33வது இடம், கொல்கத்தா 35வது இடம், மும்பை 45வது இடம் பிடித்துள்ளன. 7வது இடத்தை மதுரை நகரம் எட்டிப்பிடித்து,
* 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி நேற்று வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூரில் 105.62, மதுரை 104.36, திருத்தணி 103.64, சென்னை மீனம்பாக்கம் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதே போல கடலூரில் 101.84, பரங்கிப்பேட்டை 101.48, திருச்சி மற்றும் நாகையில் தலா 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதே போல சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.76, பாளையங்கோட்டை 100.4, தூத்துக்குடியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வழக்கத்தை விட நேற்று வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதே நேரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலும், மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தனர். வெப்பம் அதிகமாக இருந்த இடங்களில் மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கியதை பார்க்க முடிந்தது.
