தமிழகம் முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூக மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வருக்கு கோகுல மக்கள் கட்சியினர் கோரிக்கை

சென்னை: வீரன் அழகுமுத்து கோன் 269வது குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நேற்று முன்தினம் கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். பின்னர், கோகுல மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூக மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே தமிழகத்தில் உண்மையான சமூகநீதி நிலைநாட்டப்படும். இதற்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பரந்து விரிந்து வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளனர்.

அதனால் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அவரவருக்குரிய விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வசித்து வரும் மக்களுக்கு அதனுடைய மேச்சக்கால் புறம்போக்கு நிலங்களையும், மந்தைவெளி நிலங்களையும், அதற்குண்டான நீர்நிலைகளையும் அரசு பாதுகாத்து இந்த சொத்துகளை தனி நலவாரியம் அமைத்து பராமரிக்க வேண்டும்.

தமிழகத்தில் இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வியில் முன்னேற முடியாத யாதவ சமுதாய மக்களுக்கு வாரிய தலைவர்கள், தேர்வாணைய குழு உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் போன்ற பதவியில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: