ஹனோய்: வியட்நாமின் பூ குவக் தீவு அருகே சுற்றுலா சென்ற சொகுசு படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இந்தியா கொண்டு வரப்படவுள்ளன.
இந்தியாவின் பிரபல செல்போன் நிறுவனத்தின் சார்பில் வியட்நாமில் உள்ள பூ குவக் தீவுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று அவர்கள் சென்ற அதிவேக சொகுசு படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 தமிழர்கள், 3 ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 2 கேரளாவைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 15 இந்தியர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படகு புறப்பட்ட 3 நிமிடங்களில் கடற்கரையில் இருந்து வெறும் 400 மீட்டர் தொலைவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வியட்நாம் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், கடலில் ஏற்பட்ட திடீர் புயல் மற்றும் பலத்த காற்று காரணமாக எழுந்த ராட்சத அலையால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பலியான 15 இந்தியர்களின் பெயர் பட்டியலையும் இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்களும், பிரேத பரிசோதனை மற்றும் பாதுகாப்பிற்காக ஹோசிமின் சிட்டியில் உள்ள சோ ராய் மருத்துவமனைக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக, பூ குவக் மருத்துவ மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக உடல்கள் கொண்டு செல்லப்பட்ட போது, அங்கு திரண்டிருந்த வியட்நாம் நாட்டின் பாதுகாப்பு படையினர், மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர் தூவி, தலை வணங்கி கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.
இந்த கோர விபத்து குறித்து வியட்நாம் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘ஓஷன் பேர்ல் ஐலேண்ட்’ என்ற சொகுசு படகை கேப்டன் நுயென் ஹாங் ஹை (57) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். படகில் 32 இந்திய பயணிகள், 3 படகு ஊழியர்கள் மற்றும் ஒரு வியட்நாம் சுற்றுலா வழிகாட்டி என மொத்தம் 36 பேர் இருந்துள்ளனர். நேற்று மதியம் 1 மணி அளவில் ஹோன் மே ருட் நிகோய் தீவில் இருந்து அன் தோய் சர்வதேச துறைமுகத்திற்கு புறப்பட்ட இப்படகு, சுமார் 400 மீட்டர் தொலைவை கடந்த போது கடலில் வீசிய பலத்த காற்று மற்றும் ராட்சத அலை காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 13 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 15 இந்தியர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையில், விபத்தில் மீட்கப்பட்டவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள ஒரு பயணியின் உடல்நிலை குறித்து கவலைக்கிடமான தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இந்தியா கொண்டு வரப்படும் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு விபத்துக்கான இயற்கை காரணங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதாவது தாய்லாந்து வளைகுடா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் அப்பகுதியில் வீசும் தீவிர பருவமழை காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. கடுமையான பருவக்காற்றின் தாக்கத்தால் கடல் நீர்மட்டம் வழக்கத்தை விட கொந்தளிப்புடன் காணப்பட்டுள்ளது. அப்போது வெவ்வேறு வேகத்தில் பயணித்த பல்வேறு சிறிய அலைகளின் உச்சிப் பகுதிகள், பலத்த காற்றின் விசையினால் ஒன்றிணைந்து ‘கன்ஸ்ட்ரக்டிவ் வேவ் இன்டர்ஃபெரன்ஸ்’ எனப்படும் தொழில்நுட்ப விளைவின்படி திடீரென ஒரே ஒரு பிரம்மாண்ட ராட்சத அலையாக உருவெடுத்துள்ளது.
துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த அதிவேக படகின் பக்கவாட்டுப் பகுதியில், இந்த எதிர்பாராத ராட்சத அலை மிகக் கடுமையான வேகத்துடன் மோதியுள்ளது. அதிவேகமாகப் பயணிப்பதற்காக இலகுவாகவும், குறுகிய அகலத்துடனும் வடிவமைக்கப்பட்டிருந்த அந்தப் படகு, ராட்சத அலையின் மோதல் விசை தாங்காமல் உடனடியாகக் கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது. இதனால் அலை மோதிய 3 நிமிடங்களுக்குள் படகு தலைகீழாகக் கவிழ்ந்து, அதற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாதவாறு தண்ணீருக்குள் மூழ்கடித்தது என்று கூறப்பட்டுள்ளது.
