திருமலை: ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உட்பட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் மருத்துவ மாணவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு தாண்டவமாடியது. இதில் பல ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்று பாதித்து உயிர் பிழைத்தவர்கள் இன்றும் உடல் உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர்.
கொரோனா பிரச்னையால் உயிர்பலி மட்டுமின்றி பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இம்மாவட்டத்தில் 8 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
ராஜம்பேட்டையைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவர், கடந்த மாதம் இருமல் மற்றும் காய்ச்சலுடன் திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி அவர் உயிரிழந்தார். கடப்பா நகரைச் சேர்ந்த 43 வயது நபரான ஒருவர், கடந்த 1ம் தேதி கடப்பா அரசு மருத்துவமனையின் காசநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 6ம் தேதி கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மருத்துவமனையின் கோவிட் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், 7ம் தேதி உயிரிழந்தார். கடப்பா மருத்துவக்கல்லூரியில் பயிலும் 25 வயது மருத்துவ மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடப்பா மாவட்டத்தில் தற்போது 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கடப்பா மற்றும் ராஜம்பேட்டையில் திடீரென கோவிட் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து, சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உடனடியாக, இரண்டு மாநில விரைவு மீட்புக் குழுக்கள் கடப்பாவிற்கு அனுப்பப்பட்டன. இக்குழுக்கள் நேற்றுமுன்தினம் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளை பார்வையிட்டன. சுமார் 40 பேரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவர்களில் 18 பேருக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிலரின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கேற்ப கடப்பாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மீண்டும் கொேரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
