×

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் 50,000 ஐடி ஊழியர்கள் வேலையிழப்பு: மேலும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம்

பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் மனிதவள மேலாண்மையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையானது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் அலைகளால் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் தங்களின் மனிதவளத்தை நிர்வகிக்கும் முறையில் வியூகம் சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக 2025ம் ஆண்டு மற்றும் 2026ம் ஆண்டுகளில் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரபல மனிதவள நிறுவனமான டீம்லீஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மே மாதம் வரை 10,000 முதல் 15,000 ஊழியர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நடப்பு முழு ஆண்டின் இறுதியில் 25,000 முதல் 35,000 ஆக உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிஐஇஎல் எச்ஆர் சர்வீசஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, மே மாதம் வரை சுமார் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முழு ஆண்டின் கணிப்பின்படி இந்த எண்ணிக்கை 18,000 முதல் 21,000 ஆக அதிகரிக்கும் என்றும், 2025ம் மற்றும் 2026ம் ஆண்டுகளின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் இந்த வேலை இழப்பு 43,000 முதல் 50,000 வரை உயரக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை இழப்புகளுக்கு பின்னால் நிறுவனங்கள் பல்வேறு ரகசிய உத்திகளை கையாண்டு வருகின்றன. ஊழியர்களை நேரடியாக பணிநீக்கம் செய்யாமல், கடுமையான செயல்திறன் மதிப்பீட்டு முறைகளை கையாண்டு அவர்களை தாங்களாகவே வெளியேறச் செய்யும் மறைமுக பணிநீக்க முறைகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. புதிய பணியாளர்களை தேர்வு செய்யாமல் பணியிடங்களை முடக்குவது, ஊழியர்களை திட்டப்பணிகள் ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைப்பது மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை கட்டாயமாக அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்கள் தானாகவே ராஜினாமா செய்ய வைப்பது போன்ற வழிமுறைகளை நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன.

அதே நேரத்தில், தரக்கட்டுப்பாட்டு சோதனைகளை தானியங்கி முறையில் செய்தல், வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஏஐ ரோபோக்களை பயன்படுத்துதல் மற்றும் திட்ட ஆவணங்களை உடனடியாக சுருக்கித் தரும் ஏஐ கருவிகளை கையாளுதல் போன்ற வழக்கமான பணிகளை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக நிறுவனங்கள் எளிதாக்கியுள்ளன. அதே நேரத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. குறிப்பாக, ஏஐ பிராம்ப்ட் இன்ஜினியர்கள், மெஷின் லேர்னிங் ஆப்ஸ் எனப்படும் எம்எல்ஆப்ஸ் வல்லுநர்கள், ஏஐ மாதிரிகளுக்கான தரவுகளை சுத்திகரிக்கும் நிபுணர்கள் மற்றும் ஏஐ தரவு பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை கண்காணிக்கும் அதிகாரிகள் போன்ற புதிய உயர் பதவிகளுக்கான தேவைகள் சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Tags : India ,Bengaluru ,intelligence ,
× RELATED புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...