ஊட்டி, ஜூலை 11: முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரங்களில் வலம் வரும் வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் மழை பெய்து வருகிறது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள புல் வெளிகள், செடி கொடிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், சாலையோரங்களில் யானை, சிறுத்தை மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி தென்படுகின்றன.
சில சமயங்களில் புலிகள் கூட சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு தென்படுகிறது. அதேபோல் சாலையோரங்களில் மான்கள் கூட்டம் மற்றும் காட்டு மாடுகள் கூட்டம் எப்போதும் காணப்படுவதால் அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், மசினகுடி பகுதியில் இருந்து முதுமலை செல்லும் வரை சாலையின் இரு புறங்களிலும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனப்பகுதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆங்காங்கே நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.
