சென்னிமலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி திடீர் நிறுத்தம்: தளவாட பொருட்களையும் எடுத்து சென்றதால் அதிர்ச்சி

 

சென்னிமலை : சென்னிமலை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாலம் கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட கம்பிகளும் எடுத்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் வரையும், சென்னிமலைக்கு தெற்கே பசுவபட்டி பிரிவு முதல் அத்திக்காடு வரையும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதற்காக, சென்னிமலை காங்கயம் ரோட்டில் வெப்பிலி பிரிவு அருகே மலைபோல் ஜல்லி கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் பல இடங்களில் பாலம் கட்டும் பணிகளும் நடைபெறுவதால் கம்பிகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் அப்படியே திடீரென நிறுத்தப்பட்டது. 4 வழிச்சாலையில் பாலம் கட்டுவதற்கு பல இடங்களில் பாதி சாலையை அடைத்து ஆழமாக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களிலும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்குவார்கள் என பொதுமக்கள் நினைத்த வேளையில், பாலம் கட்டுவதற்காக கொண்டு வந்து அடுக்கப்பட்டிருந்த கம்பிகளை நேற்று ஒப்பந்ததாரர்கள் மூலம் எடுத்து சென்று விட்டனர். இதனால் 4 வழிச்சாலை பணிகளை தொடங்குவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என தெரிகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,“4 வழிச்சாலை என்பது பெருந்துறை, சென்னிமலை மற்றும் காங்கயம் பகுதி மக்களின் நீண்டகால கனவாக இருந்தது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே இப்படி பாதியில் பணிகளை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் குண்டும், குழியுமாக சாலைகள் மாறியதால் நாங்கள் தான் அவதிப்பட்டு வருகிறோம். அதனால் உடனடியாக பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: