புதுடெல்லி: நாட்டிலுள்ள 800க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதில் தேசிய மருத்துவ ஆணையம் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. மேலும் 45 நாள் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. நாட்டிலுள்ள 800க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்பிபிஎஸ் இடங்களுக்கான நிபந்தனையுடனான அனுமதி புதுப்பிப்பு கடிதங்களை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது.
முந்தைய காலங்களில் வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வுகளுக்குப் பதிலாக, தற்போதைய புதிய சீர்திருத்தங்களின்படி திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்ய 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மருத்துவக் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 2026ம் ஆண்டு முதல் 2027ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையைத் தொடர நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை குறித்து மருத்துவ மதிப்பீடு மற்றும் தர நிர்ணய வாரியத்தின் தலைவர் பேராசிரியர் எம்.கே.ரமேஷ் கூறுகையில், ‘வழக்கமான ஆண்டு அனுமதி புதுப்பிப்பு ஆய்வுகளுக்குப் பதிலாக, தற்பொழுது நிபந்தனையுடனான புதுப்பித்தல் மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். கல்லூரிகள் தங்களின் குறைபாடுகளைச் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், வாரியத்தின் அடுத்தடுத்த திடீர் சோதனைகளின் போது குறைபாடுகள் நீடித்தால், எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும்’ என்று தெரிவித்தார். இந்த புதிய வழிமுறையானது மருத்துவக் கல்லூரிகளின் கல்விச் செயல்பாடுகள் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் வழிவகை செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
* ‘சிசிடிவி’ பொருத்தாத 70 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாத 70 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 25 கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட வேண்டும்.
மேலும், இந்த கேமராக்களின் பதிவுகளை 30 நாட்கள் சேமித்து வைப்பதுடன், ஆணையத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நேரலையாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் 70 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இந்த விதிகளை இன்னும் செயல்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
