ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி இல்லை: தேசியப்பாடல், தேசிய கீதத்திற்கு பிறகு தான் பாட வேண்டும்: புதிய நெறிமுறைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி இல்லை. தேசியப்பாடல் மற்றும் தேசிய கீதம் தான் முதலில் பாட வேண்டும் என்று புதிய நெறிமுறைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் கூட இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தேசிய கீதம், வந்தே மாதரம் பாடல்களை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடக்கும் அரசு விழாக்களில் கவர்னர் பங்கேற்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி அளிக்கும்படி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது முதல்வர் விஜய் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் தேசிய பாடலான வந்தே மாதம் மற்றும் தேசிய கீதத்தை பாடுவது குறித்து புதிய நெறிமுறைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

* குடிமை விருது வழங்கும் விழாக்கள், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் பிற நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும்போதும், அங்கிருந்து புறப்படும்போதும், அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் தேசியப் பாடல் பாடப்பட வேண்டும்.

* ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகியோர் தங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்குள் நடைபெறும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும்போதும், அங்கிருந்து புறப்படும்போதும், அணிவகுப்பின்போது தேசியக் கொடி கொண்டு வரப்படும்போதும் இது இசைக்கப்பட வேண்டும்.

* தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடும்போதோ அல்லது இசைக்கும்போதோ, அவற்றின் சரியான வரிகள் மற்றும் உச்சரிப்பு ஆகியவை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். சரியான வரிகள் மற்றும் உச்சரிப்பு வழிகாட்டி ஒன்றிய உள்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

* இந்திய அரசால் சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வேறு எந்தவொரு நிகழ்விலும் தேசியப் பாடல் இசைக்கப்பட வேண்டும்.

* சில மாநிலங்களில், தேசிய கீதம் அல்லது தேசியப் பாடலுடன் மாநிலப் பாடலும் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. மாநிலப் பாடலானது தேசியப் பாடல் அல்லது தேசிய கீதத்துடன் பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ, தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகிய இரண்டும் ஒன்றாகப் பாடப்பட அல்லது இசைக்கப்பட வேண்டும்; மேலும் முதலில் தேசியப் பாடலும், அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட அல்லது இசைக்கப்பட வேண்டும். அதன்பிறகு தான் மாநில பாடல் இசைக்கப்பட அல்லது பாடப்பட வேண்டும்.

* ஜனாதிபதி வருகை, மூவர்ணக் கொடி ஏற்றம் மற்றும் ஆளுநர்களின் உரை போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின்போது, ​​மூன்று நிமிடங்கள் பத்து வினாடிகள் கால அளவு கொண்ட அதன் ஆறு சரணங்களும் பாடப்பட வேண்டும்.

* தேசியப் பாடல் பாடப்படும்போது கூடியிருப்பவர்கள் கவன நிலையில் (attention) நிற்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: